பிரிட்டன், சீனா, அமெரிக்காவில் புதிதாக பரவி வரும் கொரோனா தொற்று, அமெரிக்க அரசின் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் ஆகியவற்றின் காரணமாகக் கடந்த வாரம் இந்தியச் சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு குறைவாக இருந்தது. இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 900 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டுள்ளார்.
இதன் வாயிலாகத் திங்கட்கிழமை வர்த்தகத்தில் இந்திய சந்தையில் அன்னிய முதலீடு அளவு இயல்பு நிலைக்குத் திரும்பியதன் வாயிலாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.51 ரூபாயாக உயர்ந்துள்ளது.
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு
வியாழக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 பைசா உயர்ந்து 73.55 ரூபாய்க்கு உயர்ந்த நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறையில் கொரோனா பாதிப்பால் சரிந்த பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையை மீட்டு எடுக்க அமெரிக்க அரசு சுமார் 900 பில்லியன் டாலர் மதிப்பிலான ஊக்கத் திட்டத்தை ஒப்புதல் அளித்தது.
அன்னிய முதலீடுகள் அதிகரிப்பு
இதன் வாயிலாக ஒட்டுமொத்த ஆசியச் சந்தையும், இந்தியச் சந்தையும் வர்த்தக உயர்வை எதிர்கொண்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றது. இதன் வாயிலாக இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்தனர்.
அமெரிக்காவின் ஊக்கத் திட்டம்
900 பில்லியன் டாலர் ஊக்க திட்டத்திட்டதால் அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை வளர்ச்சி பெரிய அளவில் உயரும். ஆனால் அரசின் நிதிநிலையில் கணிசமான மாற்றம் ஏற்படும். ஊக்கத் திட்டத்திற்கான நிதியைத் திரட்டும் முயற்சியில் அமெரிக்காவின் கடன் சுமையும் அதிகரித்த வாய்ப்பு உள்ளதால் சர்வதேசச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்புப் பலவீனம் அடைந்துள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகம்
இதன் வாயிலாகத் திங்கட்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா உயர்ந்து 73.55 ரூபாயில் இருந்து 73.51 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதே வேளையில் உலகின் 6 முக்கிய நாணயங்கள் கொண்ட பட்டியலில் அமெரிக்க டாலரின் மதிப்பு 0.05 சதவீதம் சரிந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
ஆசியச் சந்தையில் ஏற்பட்டுள்ள சாதகமாக வர்த்தகச் சூழ்நிலை மற்றும் அமெரிக்காவில் ஒப்புதல் பெறப்பட்டு உள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் ஆகியவற்றின் எதிரொலியாகச் சென்செக்ஸ் சுமார் 380 புள்ளிகள் வரையில் உயர்ந்து புதிய உச்ச அளவான 47,354.71 புள்ளிகளை அடைந்துள்ளது.
இதேபோல் நிஃப்டி குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் அதிகப்படியாக 120 புள்ளிகள் வரையில் உயர்ந்து 13,865.45 புள்ளிகளை அடைந்துள்ளது.
கச்சா எண்ணெய் சந்தை
மேலும் இன்றைய வர்த்தகத்தில் WTI கச்சா எண்ணெய் 0.06 சதவீதம் சரிந்து 48,20 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.18% சரிந்து 51.20 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
இதேபோல் இயற்கை எரிவாயு விலை 9.02 சதவீதம் சரிந்து 2.291 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.