அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் மட்டும் சுமார் 1.13 ரூபாய் சரிந்து 20 மாதத்தில் இல்லாத பெரும் சரிவை அடைந்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று காரணமாகத் தமிழ்நாடு உட்பட 6க்கும் மேற்பட்ட மாநிலங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் வர்த்தகம் முடங்குவது மட்டுமல்லாமல் நாட்டின் வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் ரூபாய் மதிப்பில் ஏற்பட்டு உள்ள 20 மாத வீழ்ச்சி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது புதிய கொரோனா எண்ணிக்கை தொற்று கடந்த 3 நாட்களில் மட்டும் 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகா, சட்டீஸ்கர், கேரளா எனப் பல மாநிலங்களில் முழுமையான லாக்டவுன் அறிவிக்கப்படாமல் தளர்வுகளுடன் முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழ்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1.13 ரூபாய் சரிந்து 74.56 ரூபாய்க்குச் சரிந்துள்ளது இறக்குமதி பொருட்களை மட்டும் அல்லாமல் முதலீட்டுச் சந்தையையும் பாதிக்க உள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எனப் பல இறக்குமதி பொருட்களின் விலை உயரும்.
கொரோனா தொற்று காரணமாக இந்தியச் சந்தையில் புதிய முதலீடுகள் வருவது குறைந்து வரும் நிலையில், சில முக்கிய பிரிவுகளில் இருந்து முதலீடுகள் வெளியேறியும் வருகிறது. இதனால் இந்திய சந்தையில் டாலர் இருப்பு குறைந்து ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது.
பல மாநிலங்களில் லாக்டவுன் அறிவிப்புகள் அடுத்தடுத்து அறிவிக்கப்படும் காரணத்தால் வெளி மாநில ஊழியர்கள் குடும்பம் குடும்பமாக மீண்டும் சொந்த ஊருக்குச் செல்ல துவங்கியுள்ளது. மேலும் வட இந்திய மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் டிக்கெட் பதிவுகள் தற்போது முழுமையாகத் தீர்ந்துள்ளது. இந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு நீண்ட காலம் தேவைப்படும் எனவும் கணிக்கப்படுகிறது.