வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சுமார் 2,000 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவை எதிர்கொண்டது சென்செக்ஸ், 2020ல் மே மாதத்திற்குப் பின் அதிகளவிலான சரிவை மும்பை பங்குச்சந்தை நேற்று எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று மற்றும் அதன் பாதிப்புகள் குறைந்த நிலையில் இந்த மாபெரும் பங்குச்சந்தை சரிவுக்கு மிகவும் முக்கியக் காரணம் அமெரிக்கப் பத்திர சந்தையில் ஏற்பட்ட திடீர் வளர்ச்சியே ஆகும். இதை அடுத்து அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்த தங்களது முதலீட்டை வெளியேற்றி அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்தனர்.
இதன் எதிரொலியாகப் பங்குச்சந்தை பெருமளவிலான சரிவை எதிர்கொண்டது மட்டும் அல்லாமல் ரூபாய் மதிப்பும் சரிந்தது.
பங்குச்சந்தை முதலீடுகள்
இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட மார்ச் 23, 2020க்குப் பின் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஓரே நாளில் ஒரு ரூபாய்க்கும் அதிகமான சரிவை எதிர்கொண்டு 73.47 ரூபாயைத் தொட்டுள்ளது.
பங்குச்சந்தையில் இருந்து முதலீட்டு வெளியேற்றம் மற்றும் அரசு பத்திரங்களின் விற்பனை ஆகியவை ரூபாய் மதிப்பை அதிகளவில் பாதித்துள்ளது. பங்குச்சந்தையில் இருந்து முதலீட்டு வெளியேற்றம் மற்றும் அரசு பத்திரங்களின் விற்பனை ஆகியவை ரூபாய் மதிப்பை அதிகளவில் பாதித்துள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
வியாழக்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.42 ரூபாயாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தையில் ஏற்பட்ட ரத்தக்களறிக்குப் பின் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 105 பைசா சரிந்துள்ளது. அதாவது ஓரே நாளில் ரூபாய் மதிப்பு 1.05 ரூபாய் சரிந்து 73.47 ரூபாய்க்குச் சரிந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரும் நிலை உருவாகியுள்ளது. சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 66 டாலர் என்ற மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில் தற்போது ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயர்த்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியப் பொருளாதாரம்
மேலும் இந்தியப் பொருளாதாரம் டிசம்பர் காலாண்டில் சரிவில் இருந்து வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. டிசம்பர் காலாண்டின் முடிவில் நாட்டின் ஜிடிபி 0.4 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
பன்னாட்டு முதலீட்டாளர்கள்
இது பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் சாதகமான வாய்ப்பை உருவாக்கியிருந்தாலும், அமெரிக்கப் பத்திர சந்தையில் கிடைக்கும் லாப அளவீடுகள் மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் மீண்டும் முதலீடுகள் குவிய வாய்ப்புகள் சற்று குறைவாகவே உள்ளது.
மக்களுக்குப் பாதிப்பு
ரூபாய் மதிப்பில் ஏற்பட்டு உள்ள சரிவு மூலம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலையும் உயரும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாகப் பெட்ரோல், டீசல், தங்கம், உற்பத்தி பொருட்களின் விலை உயரும்.