இந்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் நிறுவனத்துடன் முதல் முறையாகக் கைகோர்த்துள்ளது. மத்திய அரசு ஈகாமர்ஸ் துறையைச் சீர்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் பல முக்கியமான உத்தரவுகளையும், கட்டமைப்புகளையும் உருவாக்கி வருகிறது.
இந்த நேரத்தில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் பிளிப்கார்ட் முக்கியமான ஒரு திட்டத்திற்காகக் கைகோர்த்துள்ளது, ஈகாமர்ஸ் துறை சார்ந்த நிறுவனங்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா
தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் (DAY-NRLM) திட்டத்தின் கீழ் இருக்கும் பல லட்சம் கைவினை கலைஞர்கள் தயாரித்த பொருட்களை இந்தியா முழுவதும் இருக்கும் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் ஈகாமர்ஸ் தளம் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கைவினை கலைஞர்கள்
கைவினை கலைஞர்கள் தயாரித்த பொருட்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்திற்காக மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் பிளிப்கார்ட் உடன் இணைந்துள்ளது. இந்தக் கூட்டணி மூலம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 10 கோடி வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பொருட்களை விற்பனை செய்ய முடியும்.
ஒப்பந்தம்
இதற்காகப் பிளிப்கார்ட் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. பிளிப்கார்ட் இந்தியாவில் துவங்கப்பட்ட நிறுவனமாக இருந்தாலும், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு, அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்தால் கைப்பற்றப்பட்டு இயங்கி வருகிறது.
தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம்
இந்தக் கூட்டணி மூலம் இந்தியா முழுவதும் தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் (DAY-NRLM) திட்டத்தின் கீழ் இருக்கும் பல லட்சம் கைவினை கலைஞர்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறுவது மட்டும் அல்லாமல் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும். குறிப்பாகப் பெண் கைவினை கலைஞர்கள் அதிகளவில் நன்மை அடைவார்கள்.
கிரிராஜ் சிங்
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் கிரிராஜ் சிங் DAY-NRLM திட்டத்தின் கீழ் இருக்கும் கைவினை கலைஞர்களின் பொருட்களை இந்தியா முழுக்கக் கொண்டு செல்ல அனைத்து சாதகமான வழிகளையும் ஆய்வு செய்து வருகிறோம். இதன் முதல் படி தான் பிளிப்கார்ட் உடனான கூட்டணி.
பிளிப்கார்ட் - அமேசான்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான அமேசான், 2021ஆம் ஆண்டுத் துவக்கத்தில் இந்தியர்கள் தயாரித்த பொருட்களை இந்தியா முழுவதும் மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் கொண்டு செல்லும் விதமாக பல லட்ச வர்த்தக நிறுவன அமைப்புகளை ஆன்லைன் வர்த்தகத் தளத்திற்குக் கொண்டு வர பயிற்சி அளிக்க உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.