ஈரான் மீதான அமெரிக்காவின் போர் குறித்து முதன்முறையாக ரஷ்யா வெளிப்படையாக கருத்து தெரிவிக்க தொடங்கியிருக்கிறது. பிப்ரவரி 28ஆம் தேதி திடீரென அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதில் அயத்துல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். கமேனியின் படுகொலையை அடுத்து ஈரானும் தீவிரமாக பதில் தாக்குதலை நடத்தியது.
இரண்டு வார காலமாக இரு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி எந்த ஒரு தாக்குதலும் நடத்தாமல் இருக்கின்றன. ஆனால் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடத்துவதிலும், உலக அளவில் கச்சா எண்ணெய் சப்ளையை சரி செய்வதிலும் இரண்டு தரப்புமே முனைப்பு காட்டவில்லை. ஒவ்வொரு நாளும் ஈரானும் அமெரிக்காவும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்த வண்ணம் இருக்கின்றன.

இந்த போரில் பெரிய அளவில் தலையிடாமல் மௌனம் காத்து வந்த ரஷ்யா முதன்முறையாக அமெரிக்காவை விமர்சனம் செய்திருக்கிறது. முன்பு எப்படி பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் மூலம் பல்வேறு நாடுகளை கட்டுப்படுத்தியதோ அதேபோல அமெரிக்கா உலக எரிபொருள் சந்தையை கைப்பற்றி உலக நாடுகள் எல்லாம் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார் ரஷ்ய அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்.

அமெரிக்கா ஒரு சுயநல நாடு தன்னுடைய நலனுக்காக அந்த நாடு என்ன வேண்டுமானாலும் செய்யும் என ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் திடீரென வெனிசுலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்து அந்த நாட்டு எண்ணெய் வளங்கள் தங்களுக்கே சொந்தமானது என அமெரிக்கா அறிவித்தது. தற்போது ஈரான் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த இரண்டுமே சொல்ல வருவது ஒன்றுதான் உலக எரிசக்தி சந்தை தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனவே எந்தெந்த நாடுகளில் எல்லாம் அதிக எண்ணெய் வளம் இருக்கிறதோ அங்கெல்லாம் மறைமுகமாக ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை தூண்டுவது போரினை தொடங்குவது, திடீரென அந்த நாட்டுத் தலைவர்களை நாடு கடத்தி சிறை பிடிப்பது போன்ற செயல்களல் அமெரிக்கா ஈடுபடுகிறது என கூறியிருக்கிறார்.
தன்னுடைய நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கு அமெரிக்கா தயாராகிவிட்டது என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் ஐரோப்பிய நாடுகள் எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு அமெரிக்காவை தான் சார்ந்திருக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது என கூறியிருக்கிறார்.
சர்வதேச நாடுகளுக்கு இடையிலான உறவில் அமெரிக்காவின் இத்தகைய செயல்பாடுகள் மீண்டும் இந்த உலகம் காலனி ஆதிக்கத்தை நோக்கி செல்கிறதோ என்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிடுகிறார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறி அதனை அப்படியே கிடப்பில் போட்டுள்ளார் , டிரம்பின் குறியே உலக எண்ணெய் சந்தை அதில் அமெரிக்காவின் ஆதிக்கம் என்பது தான் என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications

