வல்லரசு நாடுகளின் தடையின் காரணமாக மோசமான வர்த்தக நெருக்கடிகளைச் சந்தித்து வரும் ரஷ்யா தனது வர்த்தகத்தைப் புதிய வழித்தடத்திற்கு மாற்ற உக்ரைன் போர் துவங்கிய நாளில் இருந்து திட்டமிட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் ரஷ்யா-வை போலவே நீண்ட காலமாக வல்லரசு நாடுகளின் தடையால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் ஈரான் உடன் பல்வேறு முக்கியத் திட்டங்களுக்காக ரஷ்யா கைகோர்த்துள்ளது. ரஷ்யா - ஈரான் கூட்டணியில் இரு நாடுகளும் முக்கிய வர்த்தகமாக விளங்கும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை சார்ந்து தான் அதிகப்படியான முதலீடு குவிய உள்ளது.
ஈரான் உடனான ரஷ்யாவின் கூட்டணி வல்லரசு நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
ரஷ்யா மற்றும் ஈரான்
ஜூலை 19ஆம் தேதி உலக நாடுகளின் வர்த்தகத் தடையால் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ள ரஷ்யா மற்றும் ஈரான் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் சுமார் 40 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3.2 லட்சம் கோடி முதலீட்டு திட்டங்களைச் செயல்படுத்த இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளது.
காஸ்ப்ரோம், நேஷனல் ஈரானிய எண்ணெய்
ரஷ்யாவின் காஸ்ப்ரோம் மற்றும் நேஷனல் ஈரானிய எண்ணெய் நிறுவனம் ஆகிய இரண்டும் ரஷ்ய அரசு எரிசக்தி நிறுவனத்தின் முதலீட்டில் அமைக்கப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்கள், பைப்லைன் அமைத்தல், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு திட்டங்களின் கட்டுமானத்திற்கு உதவுவதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.
விளாடிமிர் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஈரான் மற்றும் துருக்கி நாட்டுத் தலைவர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் முடிவில் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்திற்கு ஈரான் மற்றும் ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது.
இயற்கை எரிவாயு
ரஷ்யாவை விட ஈரான் அதிக இயற்கை எரிவாயு இருப்புக்களைக் கொண்டுள்ளது. இரண்டுமே அமெரிக்கத் தடைகளால் மாட்டிக்கொண்டு இருப்பவை என்பதால் அவை சர்வதேச தொழில்நுட்பங்கள் மற்றும் மூலதனத்திற்கான அணுக முடியாது. ஈரான் மற்றும் ரஷ்யா ஒப்பந்தம் மூலம் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் சந்தையில் இவ்விரு நாடுகளின் ஆதிக்கம் அதிகரிக்கும்.
ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா
ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவை ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதை முழுமையாகத் தடுக்க முடிவு செய்துள்ள நிலையில் தற்போது ரஷ்யா பிற நாடுகளுக்கு விநியோகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
ரஷ்யா-சீனா
இந்த நிலையில் ரஷ்யா - சீனா மத்தியில் உக்ரைன் போருக்கு பின்பு பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் எனர்ஜி உறவுகளைப் பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக ரஷ்யா-சீனா எரிவாயு பைப்லைன் அமைக்கும் பணியை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் துவங்க முடிவு செய்துள்ளது. இந்தப் பைப்லைன் இரு நாடுகள் மத்தியில் சுமார் 2,600 கிலோமீட்டர் தூரம் செல்லும் மற்றும் 2030 இல் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான்
ஈரான் நாட்டின் அனுஆயுதங்கள் விதிமுறைகள் மீறியதாகவும், அனு ஆயுதங்களைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு 2006 ஜூலை மாதம் வல்லரசு நாடுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் ஐநா ஈரான் மீது பல்வேறு தடைகளை விதித்தது.
ஈரான் நீண்ட நாள் போராட்டம்
இதில் குறிப்பாக ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டு, பின்னாளில் சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டு இன்று வரையில் உலக நாடுகளுடன் இணைந்து வர்த்தகம் செய்ய முடியாமல் தனித்து விடப்பட்டு உள்ளது. ஈரான் மீதான தடைகளை நீக்க ஐநா சார்பில் அவ்வப்போது ஆலோசனைக் கூட்டம் நடந்தாலும் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.