ரஷ்யா எண்ணெய்-க்கு ஜி7 நாடுகள் விதித்த விலை உச்ச வரம்புக்கு ஆதரவில்லை என்ற இந்தியாவின் அறிவிப்பினை ரஷ்யா வரவேற்றுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரைத் தொடர்ந்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
ரஷ்யாவின் வருவாய் விகிதத்தில் கச்சா எண்ணெய் விற்பனை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.
ஜி 7 நாடுகளின் மிரட்டல்
ரஷ்யா பொருளாதாரத்தை சீர்குலைக்க, ரஷ்யா கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 60 டாலர்களாக விலை உச்ச வரம்பை நிர்ணயம் செய்தன. இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியாவும் ஒப்புதல் கொடுத்தன. இந்த உச்ச வரம்புக்கு மேலாக ரஷ்யா விற்பனை செய்தால், இன்சூரன்ஸ் மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பிற சேவைகளை தடை செய்யப்படும் என்றும் மிரட்டின.
இந்தியாவுக்கு ஆதரவு
இந்த உச்ச வரம்பை ஆதரிக்க இந்தியா மறுத்து விட்டது. இந்த நிலையில் இந்தியாவின் இந்த ஆதரவை ரஷ்யா வரவேற்றது. இந்தியாவுக்கு தொடர்ந்து சப்ளையில் எந்த பிரச்சனையும் இருக்காது. தங்கள் ஆதரவு முழுமையாக இருக்கும் என்றும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்சூரன்ஸ் உள்ளிட்ட சில பிரச்சனைகளை சமாளிக்க, இந்தியாவுக்கு பெரிய கப்பல்களை குத்தகைக்கு விடவும், கட்டுமானங்களில் ஒத்துழைப்பு தரவும் ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அறிவித்தது.
கவலையளிக்கும் விஷயம்
ரஷ்யாவின் இந்த அறிவிப்பால் இந்தியாவுக்கு பலன் தான் என்றாலும், தடை விதித்த நாடுகளின் கவனம் தற்போது இந்தியாவின் பக்கம் திரும்பியிருக்கலாம் என்பதும் கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. எனினும் ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை தொடக்கத்தில் இருந்தே இத்தகைய பிரச்சனைகள் மேலோங்கியிருக்கின்றன.
பிரச்சனைகளுக்கு மத்தியில் எண்ணெய்
அதையெல்லாம் சமாளித்து இன்று வரையில் இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி வருகின்றது. பல்வேறு நெருக்கடிக்களுக்கு மத்தியிலும் ரஷ்யாவும் சப்ளை செய்து வருகின்றது. ரஷ்யா உச்ச வரம்புக்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதோடு இந்த உச்ச வரம்புக்கு பிறகும் எண்ணெய் வணிகம் எப்போதும் போல் இருக்கும் என்பதில் ரஷ்யா தீர்மானமாக உள்ளது.
மக்களின் நலனுக்காக சிறந்த ஒப்பந்தங்கள்
அதேபோல் இந்தியாவும் மக்களின் நலனுக்காக சிறந்த ஒப்பந்தங்களை அரசு தொடர்ந்து செய்யும். ரஷ்யாவின் எண்ணெய்யை மட்டும் வாங்க நாங்கள் எண்ணெய் நிறுவனங்களை கேட்கவில்லை. எண்ணெய் அடிப்படையில் எது சிறந்ததோ அதனை வாங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். ஆக எந்த சந்தை எங்களுக்கு உகந்தோ அங்கு வாங்குவோம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
எல்லாம் மக்களின் நலனுக்கான மட்டுமே
நாங்கள் ஒரு நாட்டில் மட்டும் இருந்து எண்ணெய் வாங்கவில்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் பலரிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறோம். இந்திய மக்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பான ஒப்பந்தத்தினை செய்கிறோம். இது தான் புத்திசாலித்தனமான ஒன்று. அதனைத் தான் நாங்கள் செய்ய முயற்சி செய்கிறோம் என்றும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளது நினைவுகூறத்தக்கது.
இது பொருந்தாது
எப்படியிருப்பினும் இந்த உச்ச வரம்பு டிசம்பர் 5க்கு முன்னர் கப்பலில் ஏற்றப்பட்ட எண்ணெய்களுக்கு பொருந்தாது. ஜனவரி 19-க்கு முன்னர் இறக்கப்படும் கப்பல்கள் விலை வரம்புக்கு உட்பட்டவை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தொடர்ந்து கப்பல்களை அனுப்பவும், இன்சூரன்ஸ் செய்யவும், பணம் செலுத்தும் முறையையும் தொடர்ந்தால், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க முடியும் என உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.
சந்தையை சீர்குலைக்கும்
ரஷ்யா மீது விதிக்கப்பட்டிருக்கும் இந்த தடையானது சந்தைக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகும். இது சப்ளை சங்கிலியினை சீர்குலைக்கிறது. உலகளாவிய எரிசக்தி சந்தையினை சிக்களுக்குள்ளாக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.