ரஷ்ய அரசு இந்தியாவிற்குத் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்ய ஆஃபர் கொடுத்த நிலையில், மத்திய அரசு இதை உடனடியாக ஏற்றுக்கொண்டது.
ஆனால் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இந்தியாவிற்குக் கொண்டு வர பல பிரச்சனைகள் இருந்த நிலையில் இரு நாடுகளும் குழம்பிக் கொண்டு இருக்கையில் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஷ்ய கச்சா எண்ணெய்
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியில் சில முக்கியமான பிரச்சனைகள் உள்ளது, குறிப்பாக ஆயில் டேங்கர், இன்சூரன்ஸ் பாதுகாப்பு, கச்சா எண்ணெய் கலவை போன்ற பிரச்சனைகள் உள்ளது. அனைத்தையும் தாண்டி இந்தியாவில் ரஷ்ய கச்சா எண்ணெய்-யை சுத்திகரிக்கப் போதுமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
ரஷ்யா - இந்தியா பேச்சுவார்த்தை
இந்த நிலையில் ரஷ்யா - இந்தியா மத்தியிலான பேச்சுவார்த்தையில் ரஷ்யா, இந்தியாவில் கச்சா எண்ணெய் டெலிவரி செய்யும் ஷிப்பிங் மற்றும் இன்சூரன்ஸ் சுமைகளை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.
3.5 மில்லியன் பேரல்
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்பு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து சுமார் 3.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை அதிகப்படியான தள்ளுபடி விலையில் வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்படத் தயாராகியுள்ளது.
விதிமுறை மீறல்
இதற்கிடையில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் எவ்விதமான விதிமுறை மீறல்களும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியா - அமெரிக்கா மத்தியிலான நடப்புறவில் எவ்விதமான பாதிப்பும் இல்லை.
இந்தியன் ஆயில் கார்பரேஷன்
இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் Russian Urals oil-ஐ 20-25 டாலர் தள்ளுபடியில் மே மாதத்தில் சுமார் 3 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்-ஐ ஜெனிவா வர்த்தக நிறுவனமான VITOL-யிடம் இருந்து வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியன் ஆயில் கார்பரேஷன் ரஷ்யாவிடம் வாங்கவில்லை, ஜெனிவா விற்பனையாளரிடம் இருந்து வாங்கும் காரணத்தால் எவ்விதமான பிரச்சனையும் இல்லை.