உக்ரைன் இடையேயான போர் பதற்றத்தின் மத்தியில், உக்ரைனின் தலைமையகத்தில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பிரச்சனை இன்னும் பூதாகரமாக மாறலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நேட்டோ அமைப்பு, ஐ நா கூட்டமைப்பு என பல தரப்பில் இருந்து, பேச்சு வார்த்தை நடத்தினாலும், அதற்கு ரஷ்யா செவி மடுத்ததாகவும் தெரியவில்லை.
ஏனெனில் தொடர்ந்து உக்ரைனில் முன்னேறிக் கொண்டுள்ளது. தாக்குதலையும் தொடங்கியுள்ளது.
சப்ளை பாதிக்கலாம்
இதற்கிடையில் சர்வதேச அளவில் பணவீக்கமானது உச்சம் தொடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் கோதுமை, மக்காச்சோளம், சன்பிளவர் ஆயில் உள்ளிட்ட பலவற்றின் சப்ளையில் பாதிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இறக்குமதியாளர்களை வேறு நாடுகளை நோக்கி செல்ல வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை அதிகரிக்கலாம்
ஏற்கனவே கொரோனாவின் மத்தியில் சப்ளை சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விலைவாசி பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றம் மேற்கொண்டு சப்ளை சங்கிலியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக விலை வாசி இன்னும் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்களும் வர்த்தகர்களும் கூறுகின்றனர்.
சாமானியர்களுக்கு பாதிப்பு
ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்த நிலையில், சர்வதேச சந்தை சந்தைகள் அனைத்தும் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றன. குறிப்பாக கச்சா எண்ணெய் விலையானது 100 டாலர்களையும் எட்டியுள்ளது. இது அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக சாமானிய மக்கள் மத்தியில் பெரும் பிரச்சனையை உருவாக்கலாம்.
விலை போர் வரலாம்
உலகின் கோதுமை ஏற்றுமதியில் சுமார் 29%மும், மக்காச்சோளம் ஏற்றுமதியில் 19%மும்., சர்வதேச அளவில் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் 80%மும் தங்கள் வசம் வைத்திருக்கும் இரு நாடுகளிலும், நிலவி வரும் பதற்றமான நிலையானது. சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இந்த நாடுகளில் நிலவி வரும் பதற்றமான நிலையானது, இறக்குமதி நாடுகளை பாதிக்கலாம். குறிப்பாக கருங்கடல் பகுதியில் நிலவி வரும் பதற்றம் மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மொத்தத்தில் இது பெரும் விலைப்போரினை உருவாக்கலாம்.
விலை ஏற்றம்
இதற்கிடையில் கமாடிட்டி சந்தைகளிலும் மக்காச்சோளம், கோதுமை, சோயாபீன் என முக்கிய கமாடிட்டிகளின் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது. ஏற்கனவே கடந்த ஆண்டில் நிலவி வந்த இயற்கை பேரழிவுகளால் உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தற்போது சப்ளையும் பாதிக்கப்பட்டால், அது விலையினை இன்னும் அதிகரிக்க வழிவகுக்கும்.
ஏற்றுமதி
Refinitiv தரவின் படி, ரஷ்யாவின் கோதுமை ஏற்றுமதியில் சுமார் 70%,மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோதுமை, பால் பொருட்கள் தேவை காரணமாக, உலக அளவில் உணவு பொருட்கள் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றம், இன்னும் விலையை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது உலக நாடுகளையே அச்சம் கொள்ள வைத்துள்ளது.
சாமானியர்களுக்கு பெரும் பாதிப்பு
இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, மாற்று எரிபொருள் தயாரிப்பில் விவசாய பொருட்களுக்கான தேவையும் அதிகரித்து வரும் நிலையில், விவசாய பொருட்களுக்கும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இந்த இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனையானது, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தலாம் என்பது மறுக்க முடியா உண்மையே.