ரஷ்யா - உக்ரைன் நாடுகள் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும் எவ்விதமான தீர்வும் காணப்படாத நிலையில், இரு நாடுகள் மத்தியிலும் தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இந்தப் போர் காரணமாக ரஷ்யா, உக்ரைன் நாடுகளின் ஏற்றுமதி வர்த்தகம் மொத்தமாகத் தடைப் பெற்றுள்ளது.
இதனால் இந்திய தயாரிப்புகளுக்குத் தற்போது சர்வதேச சந்தையில் மிகப்பெரிய அளவிலான டிமாண்ட உருவாகியுள்ளது. இந்திய விற்பனையாளர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியான ஆர்டர்கள் குவிய துவங்கியுள்ளது.
இந்திய உணவு பொருட்கள்
சர்வதேச சந்தையில் விவசாயம் மற்றும் உணவு பொருட்கள் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்யும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள காரணத்தால் சர்வதேச சந்தையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்திய உணவு பொருட்களுக்குச் சர்வதேச சந்தையில் அதிகப்படியான டிமாண்டு உருவாகியுள்ளது.
கோதுமை, சோளம், மசாலா
இந்தியாவில் விளைந்த கோதுமை, சோளம், மற்றும் இதர முக்கிய மசாலா பொருட்களுக்குத் தற்போது சர்வதேச விவசாயப் பொருட்கள் சந்தையில் அதிகப்படியான தேவை உருவாகியுள்ளதால், இதன் விலையும் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டும் விளை பொருட்களின் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது.
விலை உயர்வு
கடந்த 4 நாட்களில் மட்டும் காண்ட்லா துறைமுகத்தில் கோதுமை விலை ஒரு குவின்டால் விலை 2200 ரூபாயில் இருந்து 2350 முதல் 2400 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இந்த டிமாண்ட் மற்றும் விலை மாற்றங்கள் மார்ச் மாதம் முழுவதும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக Food Corporation of India அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒரு குவின்டால் என்றால் 100 கிலோ
அறுவடை காலம்
மேலும் அடுத்த அறுவடைக் காலம் ஏப்ரல் 13க்கு பின்பு தான் என்பதால் அடுத்தச் சில வாரத்தில் கோதுமை மற்றும் கோதுமை சார்ந்த பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என ரோலர் மாவு மில் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் தலைவர் சஞ்சய் பூரி தெரிவித்துள்ளார்.
ரிடைல் விலை
ஏற்றுமதி செய்யப்படும் கோதுமை விலை அதிகரித்துள்ளதால் இந்தியாவில் கடந்த வாரம் ஒரு கிலோ கோதுமை விலை 21 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 24 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் பல அமைப்புகள் உணவு பொருட்களின் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.