உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் பதற்றம் காரணமாக இந்தியாவின் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சர்வதேச அளவில் விலையுயர்ந்த ஆபரண ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது.
குறிப்பாக ஜெம் & ஜூவல்லரி ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், தற்போது ஆபரண ஏற்றுமதியிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
வைரம் மெருகேற்றம்
இதனால் குஜராத் மாநிலத்தினை சேர்ந்த சுமார் 15 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக குஜராத்தின் செளராஷ்டிரா பகுதிகளில் கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு ரஷ்யாவில் இருந்து சிறிய அளவிலான வைரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, மெருகேற்றப்பட்டு ஏற்றுமதி செய்து வருகின்றது.
அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை
ஆனால் தற்போது ரஷ்யாவில் இருந்து இறக்குமதி குறைந்துள்ளது. இதனால் மற்ற நாடுகளில் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு இறக்குமதியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உருவாகியுள்ளது.
ரஷ்ய வைரம் வேண்டாம்
இறக்குமதி செய்யப்படும் பெரும்பகுதி வைரங்கள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், அவற்றை அமெரிக்கா வேண்டாம் என மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வைரங்களில் 70% அமெரிக்காவுக்கே செய்யப்படுவது நினைவுகூறத்ததக்கது.
இத்தனை லட்சம் ஊழியர்களா?
குஜ்ராத் மாநிலத்தில் சுமார் 15 லட்சம் ஊழியர்கள் இந்த துறையில் இருந்து வருகின்றனர் என ஜெம்ஸ் & ஜூவல்லரி ஏற்றுமதி புரோமோஷன் கவுன்சிலின் மண்டலத் தலைவர் தினேஷ் நவடியா பிடிஐ-க்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெரியளவிலான வைரங்கள் உற்பத்தி தொடர்ந்து கொண்டிருந்தாலும், சிறிய அளவிலான வைரங்கள் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குஜராத்தின் பாவ் நகர், ராஜ்கோட், அம்ரேலி, ஜூனாகத் பகுதியை சேர்த்த மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications