அமெரிக்கா - ஈரான் மத்தியிலான போர் ஒருப்பக்கம் அமைதியான நிலையில் உலகின் மறுமுனையில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த 1-2 மாதங்களாக உக்ரைன் நாட்டின் ராணுவம் ரஷ்யாவில் இருக்கும் முக்கியமான எண்ணெய் தளம், எரிபொருள் சேமிப்பு கிடங்கு, சுத்திகரிப்பு ஆலை ஆகியவற்றின் மீது பெரும் தாக்குதலை நடத்தி ரஷ்யாவின் உள்நாட்டு சப்ளையை பாதிக்கும் அளவுக்கு பெரும் தாக்குதலை நடத்தியது.

இதைவிட முக்கியமாக உக்ரைன் ராணுவம் ரஷ்யாவில் தாக்கிய இடங்கள் எல்லை பகுதியில் இருப்பவை இல்ல, 1000 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தாக்கப்பட்ட இலக்குகளாகும். இந்த தாக்குதலுக்கு பின்பு ரஷ்யா அமைதியான நிலையில் இன்று முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த உக்ரைன் மக்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.
இன்று ரஷ்ய பாதுக்காப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் உக்ரைன் நாட்டின் எனர்ஜி கட்டமைப்புகள் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது ரஷ்யா மக்கள் வாழும் பகுதிகளிலும், எரிபொருள் தளங்களிலும் தாக்கியதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இருக்கும் என தெரிவித்துள்ளது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்.
இந்த முறை ரஷ்யா இலக்குகளை குறிவைத்து உக்ரைன் நாட்டின் எனர்ஜி கட்டமைப்புகளை தாக்குவதாகவும் அறிவித்துள்ளது. இதனால் உக்ரைன் மக்கள் அடுத்தது எத்தகைய தாக்குதல் நடக்கும் என்ற அச்சத்தில் உள்ளனர், எனர்ஜி தளத்திற்கு அருகில் இருக்கும் பல ஆயிரம் மக்கள் இப்போதே பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும், தேவையான அவசர கால தேவைக்கான பொருட்களையும் வாங்க தயாராகியுள்ளனர்.
ஜூலை மாதம் ஒரே நாளில் டிரோன் மூலம் ரஷ்யாவில் 3 எண்ணெய் மற்றும் ஏரிபொருள் சேமிப்பு கிடங்கு மீது தாக்குதல் நடத்தியுள்ளது உக்ரைன். ரஷ்யாவுக்கு மிகப்பெரிய நிதி ஆதாரமாக இருப்பது எண்ணெய் வளம் தான், ஒருப்பக்கம் ஏற்றுமதிகள் மீது பல்வேறு நெருக்கடிகள் தொடர்ந்தாலும் உள்நாட்டு சப்ளை கட்டமைப்புகள் மீது தாக்குதல் மூலம் ரஷ்யாவின் இயக்கத்தையும், பொருளாதாரத்தையும் பெரிய அளவில் நிலைகுலைய வைத்து வருகிறது உக்ரைன்.
இந்த தாக்குதலில் உக்ரைன் ரஷ்யாவில் Stavropol Krai என்ற இடத்தில் இருக்கும் 3 எண்ணெய் கிணறு மீது தாக்குதல் நடத்தியுள்ளது உக்ரைன், இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் Stavropol Krai-க்கும் உக்ரைனுக்கும் சுமார் 1200 கிலோமீட்டர் தூரம்.
உக்ரைன் சமீப காலமாக லாங்க் ரேஞ்ச் டிரோன், ஏவுகணைகளை கொண்டு ரஷ்யாவை தாக்கி வருகிறது.
இந்த தாக்குதலுக்கு முன்பு ஜூலை மாத துவக்கத்தில் சைபீரியாவில் அமைந்துள்ள ஓம்ஸ்க் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், போர் தொடங்கி நான்கு ஆண்டுகளில் அப்பகுதியில் ஏற்பட்ட முதல் வெற்றிகரமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 2,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


Click it and Unblock the Notifications