உலக நாடுகள் தொடர்ந்து கட்டம்கட்டி தடைகளை விதித்து ரஷ்யா-வை சர்வதேச சந்தை வர்த்தகத்தில் இருந்து ஒதுக்கிவைக்க முயற்சி செய்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் மூலம் தனது ஆதிக்கத்தைக் காட்டி வரும் ரஷ்யாவுக்குப் பல நாடுகள் தொடர்ந்து அதரவும், நட்புறவையும் கொண்டு உள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்களைத் தொடர்ந்து உலக நாடுகள் கைப்பற்றி வரும் நிலையில் சுமார் 100 ஆடம்பர பிரைவேட் ஜெட் விமானங்களைத் துபாயில், ரஷ்ய பணக்காரர்கள் மறைத்து வைத்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா
உலக நாடுகளின் எச்சரிக்கைகளையும் தாண்டி ரஷ்யா பிப்ரவரி மாதம் இறுதியில் உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்தது.
ரஷ்ய பணக்காரர்கள்
இந்தத் தடை உத்தரவில் பல ஐரோப்பிய நாடுகளின் அரசு திட்டமிட்டு ரஷ்ய பணக்காரர்கள் மற்றும் ரஷ்ய அரசு முதலீடுகளைக் கைப்பற்றி வந்தது. இதில் நெதர்லாந்து கைப்பற்றிய ரஷ்ய பணக்காரர்களுக்குச் சொந்தமான 14 ஆடம்பர கப்பல்களும் அடக்கம்.
சொத்துக்கள்
ஆனால் உண்மையில் பல ரஷ்ய பணக்காரர்கள் மற்றும் அரசு உடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தடை உத்தரவுக்கு முன்னரே பெரும்பாலான சொத்துக்களை மீட்டு உள்ளனர். இதில் ஒரு பகுதி சொத்துக்கள் தான் தற்போது துபாய் விமான நிலையத்தில் உள்ளது.
துபாய்
பிப்ரவரி பாதியில் இருந்து ஏப்ரல் மாதம் வரையில் சுமார் 100க்கும் அதிகமான பிரைவேட் ஜெட் விமானங்கள் துபாய் விமான நிலையத்திற்கு வந்துள்ளது. ரஷ்யா மீது துபாய் எவ்விதமான தடையும் விதிக்காத நிலையில் ரஷ்ய பணக்காரர்கள் தங்களது விமானத்தைத் தொடர்ந்து துபாயில் பாதுகாத்து வருகின்றனர் என வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
பிரிட்டன்
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா ரஷ்ய விமானங்களுக்குத் தன்நாட்டு வான்வழியில் பறக்க தடை விதித்துள்ளது. இதற்கிடையில் கடந்த மாதம் ரஷ்ய பணக்காரரான Eugene Shvidler-ன் விமானத்தைப் பிரிட்டன் அரசு கைப்பற்றியது. ஆனால் துபாயில் 100க்கும் அதிகமான பிரைவேட் ஜெட் பாதுகாப்பாக உள்ளது.