அமெரிக்காவினை சேர்ந்த ஆய்வு நிறுவனமான எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ், நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தினை 11%ல் இருந்து, 9.5% ஆக குறைத்துள்ளது.
இது அடுத்த கொரோனா அலையில் தாக்கம் குறித்து எச்சரித்துள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்தான கணிப்பினையும் மாற்றியமைத்துள்ளது.
ஏற்கனவே இரண்டாம் கட்ட பரவலுக்கு மத்தியில் நாட்டின் பல மாநிலங்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக ஏப்ரல் மே மாதங்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் பொருளாதாரம் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் தான் முந்தைய கணிப்பான 11%ல் இருந்து 9.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் துண்டு
இது அரசு மற்றும் தனியார் துறைகளின் பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளது. இதன் தாக்கம் இன்னும் சில வருடங்களுக்கு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் 2023ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.8% ஆகவும் கணித்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கொரோனாவின் கோரப்பிடிக்கும் மத்தியில், 15% மக்கள் மட்டுமே இதுவரை தடுப்பூசியினை போட்டுள்ளனர்.
தடுப்பூசி போடுவது அதிகரிக்கலாம்
எனினும் இனி வரும் காலங்களில் தடுப்பூசி விகிதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதியாண்டிலேயே கொரோனாவின் கோராத்தாண்டவத்தின் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3% சரிவினைக் கண்டது. இதே 2019 - 20ம் நிதியாண்டில் 4% வளர்சியினை மட்டுமே கண்டிருந்தது நினைவுகூறத்தக்கது.
இரட்டை இலக்கில் ஜிடிபி
முன்னதாக நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் இரட்டை இலக்கில் வளர்ச்சி இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது இரண்டாம் கட்ட அலையின் தாக்கம் மிக மோசமான நிலையில் தாக்கிய நிலையில், பல ஆய்வு நிறுவனங்களும் கணிப்புகளை குறைத்து வருகின்றன.
ரிசர்வ் வங்கியும் குறைப்பு
குறிப்பாக இம்மாத தொடக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கியே இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தினை 10.5%ல் இருந்து, 9.5% ஆக குறைத்தது. இது கடந்த 2020ம் ஆண்டினை காட்டிலும் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு மே 2021 நிலவரப்படி, நுகர்வும் மிக மோசமாக பாதிக்கப்படுள்ளது. இதனையடுத்து நுகர்வோர் நம்பிக்கை குறித்தான குறியீடுகளும் சரிவினைக் கண்டுள்ளன.