ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு கொண்டு சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கின்றனர்.குறிப்பாக மகரவிளக்கு பூஜை போன்ற காலங்களில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு ஏஐ மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், அடுத்த மண்டல பூஜை காலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவெடுத்துள்ளது. கொச்சியில் நடைபெற்ற திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு உயர்நிலைக் கூட்டத்தில் தேவஸ்வம் போர்டு தலைவர் ஜெயகுமார் மற்றும் ஏ.டி.ஜி.பி மனோஜ் ஆபிரகாம் ஆகியோர் ஆலோசனை நடத்தி ஏஐ பயன்படுத்துவதற்கு அனுமதி தந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக மண்டலகால மகரவிளக்கு பூஜைகளின்போது சபரிமலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் சபரிமலையின் முழுமையான பாதுகாப்பு மற்றும் பக்தர்கள் கூட்டத்தை கையாளும் விதமாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ஹை-ரெசல்யூஷன் கேமராக்கள், சென்சார்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் சபரிமலையின் ஒட்டுமொத்தப் பகுதியும் ஜி.பி.எஸ் மேப்பிங் செய்யப்படும். அதன் மூலம் எந்தெந்த இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நிலக்கல், பம்பா, அப்பாச்சிமேடு, மரக்கூட்டம் மற்றும் சரங்குத்தி ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய முடியும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கூறுகிறது.
ஏஐ தொழில்நுட்பமானது கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கும் போது உடனடித் தகவல்களை காவல்துறையினருக்கு வாட்ஸ்அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பும். அதுமட்டுமில்லாமல்முகம் அங்கீகார தொழில்நுட்பம் மூலம் கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் கண்டறியவும், Facial recognition camera பயன்படுத்தப்படும். நிலக்கல் மற்றும் பம்பாவில் அமைக்கப்படும் டிஜிட்டல் திரைகள் மூலம், தரிசனத்திற்கு எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்ற விவரம் பக்தர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்கின்றனர் அதிகாரிகள்.
வாகன நெரிசலைத் தவிர்க்க நிலக்கல்லில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி செய்யப்படும் என்றும் வழித்தடங்களில் குப்பைகள் தேங்குதல், குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் மருத்துவ அவசரநிலைகளை ஏஐ தொழில்நுட்பம் தானாகவே கண்டறிந்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும் என்றும் கூறுகின்றனர்.
ஏஐ பயன்பாட்டிற்காக கும்பமேளா போன்ற பிரம்மாண்ட நிகழ்வுகளில் கூட்டத்தை மேலாண்மை செய்த நிறுவனங்கள் உட்பட, மூன்று முக்கிய நிறுவனங்களுடன் தேவஸ்வம் போர்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆகஸ்ட் மாதத்திற்குள் இதற்கான ஒப்பந்தப் பணிகள் முழுமையாக முடிக்கப்படும்.இதனை அடுத்து காவல்துறையினர் மற்றும் தேவஸம் போர்டு ஊழியர்களுக்கு ஏஐ தொழில்நுட்பத்தோடு கூட்ட கட்டுப்பாடு குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications

