சச்சின் என்ற பேரை கேட்ட உடனே கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் என்று நீங்கள் நினைத்திருக்க வாய்ப்பு மிகவும் அதிகம், அப்படி இல்லையெனில் நீங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் உண்மையான வாசகர். பிளிப்கார்ட் என்கிற மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி முதலீட்டாளர்கள் நெருக்கடி காரணமாக வெளியேறிய மிகப்பெரிய பிஸ்னஸ்மேன் தான் சச்சின் பன்சால்.
பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய இவர் நிதி மற்றும் நிதியியல் சேவைத் துறையில் இறங்கி அசத்தி வருகிறார்.
100 கோடி ரூபாய் டீல்
சச்சின் பன்சால் யாரும் எதிர்பார்க்காத வகையில், DHFL ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை 100 கோடி ரூபாய்க்கு முழுமையாக வாங்கியுள்ளார். கடந்த 4 மாதத்தில் சச்சின் பன்சால் செய்ய 2வது அதிரடி முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி துறையில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகக் கூறும் சச்சின் இப்பிரச்சனைகளை டெக்னாலஜி வாயிலாகத் தீர்வு காண வேண்டும் என்று திட்டமிட்டு இத்துறையில் இறங்கியுள்ளார்.
DHFL ஜெனரல் இன்சூரன்ஸ்
வாதவான் குளோபல் கேப்பிடல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் DHFL ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சச்சின் பன்சால் பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய போது உருவாக்கிய முதலீட்டு நிறுவனமான நாவி டெக்னாலஜி நிறுவனத்தின் வாயிலாக இந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளார் சச்சின் பன்சால்.
இந்த விற்பனையின் மூலம் DHFL ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் சச்சின் பன்சால் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.
திவால்
வாதவான் குளோபல் கேப்பிடல் நிறுவனம் தற்போது தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் திவாலாக அறிவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் சச்சின் பன்சால்-இன் முதலீடு மற்றும் கைப்பற்றல் இந்நிறுவனத்தின் பெரும் சுமையை நீங்கியுள்ளது.
DHFL ஜெனரல் இன்சூரன்ஸ் தற்போது சுமார் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வாகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாவி டெக்னாலஜிஸ்
சச்சின் பன்சால் தலைமையில் நாவி டெக்னாலஜிஸ் Kissht என்கிற NBFC நிறுவனத்திலும், வோகோ, பவுன்ஸ், கிரேஸிபீ, ஆல்டிகோ கேபிடல், கிரிட்ஸ் என 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அதிகளவில் முதலீடு செய்துள்ளது.
அதில் மிக முக்கியமானது கிரிட்ஸ்.
கிரிட்ஸ்
Chaitanya Rural Intermediation Development Services என்பதன் சுருக்கமே கிரிட்ஸ் (CRIDS). வெறும் 4 மாதத்திற்கு முன்பு தான் நாவி டெக்னாலஜிஸ் சுமார் 95 சதவீத தொகையை முதலீடு செய்து மொத்த நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தது.
அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்திற்கு சச்சின் பன்சால் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
சச்சின் பன்சால்
சச்சின் தனது நாவி டெக்னாலஜிஸ் மூலம் பல தரப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்தாலும் தற்போது அவர் அதிகளவில் கவனம் செலுத்துவது வங்கியியல், நிதி சேவைகள் மற்றும் இன்சூரன்ஸ் துறையில் தான், இதனால் கூடிய விரைவில் சச்சின் பன்சால் ஒட்டுமொத்த நிதி துறையையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு ஒரு பெரிய திட்டத்துடன் வரப்போகிறார் என்பது மட்டும் உறுதி..!


Click it and Unblock the Notifications