இந்திய கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார், உலகக் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பல பெயர்களில் பாராட்டப்பட்டும், கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் சச்சின் டெண்டுல்கர் பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலேண்ட் நாட்டில் இருக்கும் நிறுவனத்தின் ரகசிய உரிமையாளராக இருந்துள்ளார்.
இது மட்டும் அல்லாமல் சச்சின் டெண்டுல்கர் மனைவி மற்றும் மாமனாரும் இந்த நிறுவனத்தின் உரிமையாளராக இருந்துள்ளது தற்போது பண்டோரா பேப்பர்ஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சச்சின் டெண்டுல்கர்
வினோத் அதானி-யை போலவே சச்சின் டெண்டுல்கரும் பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலேண்ட் நாட்டில் இருக்கும் SAAS இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்தத் தகவலை பனாமா சட்ட நிறுவனமான அல்கோகால் (Alcogal) நிறுவனத்தின் தரவுகள் மூலம் பண்டோரா பேப்பர்ஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
SAAS இண்டர்நேஷனல் லிமிடெட்
SAAS இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் 2007 முதல் இயங்கி வருவதாகத் தரவுகள் கூறும் நிலையில் 2016ல் இந்நிறுவனம் மூடப்படும் போது இந்நிறுவனத்தின் நிதி நிலை தரவுகள், நிறுவனத் தலைவர்கள் தரவுகள் அடங்கிய ஆவணங்கள் பண்டோரா பேப்பர்ஸ் ஆய்வில் கிடைத்துள்ளது.
2016 மூடல்
2016ல் இந்நிறுவனம் மூடப்படும் போது SAAS இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர்களே இந்நிறுவனத்தின் பங்குகளைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
பங்கு விற்பனை விபரம்
இதன் படி சச்சின் டெண்டுல்கர்-க்கு சொந்தமான 9 பங்குகளுக்கு $856,702, அவரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர்-க்கு சொந்தமான 14 பங்குகளுக்கு $1,375,714, அவருடைய மாமனார் ஆனந்த் மேத்தா-வுக்குச் சொந்தமான 5 பங்குகளுக்கு $453,082 பெறப்பட்டு உள்ளது.
90 பங்குகள் - அஞ்சலி டெண்டுல்கர்
2007ல் SAAS இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் துவங்கும் போது 90 பங்குகள் வெளியிடப்பட்டு உள்ளது, இதில் முதல் 90 பங்குகளைச் சச்சின் டெண்டுல்கர் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் வாங்கியுள்ளார். இதன் பின்பு 30 பங்குகளைச் சச்சின் டெண்டுல்கர் மாமனார் ஆனந்த் மேத்தா வாங்கியுள்ளார்.
60 கோடி ரூபாய்
தற்போது சச்சின் டெண்டுல்கர் கடைசியாக 2016ல் பங்குகளை விற்பனை செய்யும் போது பார்த்தால் ஒரு பங்கு சராசரியாக 96000 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த 90 பங்குகள் மதிப்பு 8.6 மில்லியன் டாலர் அதாவது 60 கோடி ரூபாய் மதிப்புடையதாக உள்ளது.
பண்டோரா பேப்பர்ஸ்
2016ல் நிறுவனத்தை மூடும் போதும் சச்சின் டெண்டுல்கர், அவருடைய மனைவி, மாமனார் ஆகியோர் கையெழுத்திட்ட ஆவணங்களும் பண்டோரா பேப்பர்ஸ் ஆய்வு மூலம் கைப்பற்றியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
2016 பனாமா பேப்பர்ஸ்
மேலும் 2016ல் பனாமா பேப்பர்ஸ் பிரச்சனை பெரியதாக வெடித்த 3 மாதத்தில் சச்சின் டெண்டுல்கர் பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலேண்ட் நாட்டில் இருக்கும் SAAS இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தை அவசர அவசரமாக மூடியுள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.