இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஒரு பங்காக, சுமார் 2500 படுக்கைகளைக் கொண்ட மருத்துவச் சிகிச்சை மையத்தைப் புதிதாக உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தின் நாடு முழுவதும் ஸ்டீல் உற்பத்தி ஆலைகள் இருக்கும் நிலையில், இத்தொழிற்சாலைகளில் இருக்கும் ஊழியர்களுக்கான மருத்துவமனையை ஏற்கனவே கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ள நிலையில், தற்போது புதிதாக 2,500 படுக்கை கொண்ட கொரோனா வார்டு-ஐ அமைக்க முடிவு செய்துள்ளது.
ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா
ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, ஏற்கனவே பிலாய் (சத்தீஸ்கர்), போகாரோ (ஜார்க்கண்ட்), ரூர்கேலா (ஒடிசா), துர்காபூர் மற்றும் பர்ன்பூர் (மேற்கு வங்கம்) ஆகிய பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலை மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளது.
கொரோனா சிகிச்சை மையம்
இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட உள்ள 2,500 படுக்கைகள் கொண்டு கொரோனா சிகிச்சை மையத்திற்கு ஸ்டீல் தொழிற்சாலையில் இருந்து நேரடியாகப் பைப் மூலம் ஆக்சிஜன் வாயுவை அளிக்க முடிவு செய்துள்ளது. பொதுவாகத் திரவ ஆக்சிஜனை வாயுவாக மாற்றி நோயாளிகளுக்கு மாற்றி அளிக்கப்படும், ஆனால் தற்போது ஸ்டீல் அத்தாரிட்டி நேரடியாக ஆக்சிஜன் வாயுவை நோயாளிகளுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
ஆக்சிஜன் வாயு சப்ளை
திரவ ஆக்சிஜனுக்குத் தற்போது இந்தியா முழுவதும் அதிகளவிலான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் அரசின் பரிந்துரைப்படி ஸ்டீல் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை நேரடியாக வாயுவாகவே அளிக்க உள்ளதாக ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா முடிவு செய்துள்ளது.
2500 படுக்கை கொண்ட மருத்துவமனை
ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா தற்போது அறிவித்துள்ள 2500 படுக்கைகளைப் பல்வேறு கட்டங்களாக மாநில அரசுடன் இணைந்து மேலே குறிப்பிட்டு உள்ள 5 மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அமைத்து அதன் பின்பு படிப்படியாக இதன் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஸ்டீல் தொழிற்சாலை மருத்துவமனை
தற்போது 3 மாநிலத்தில் இருக்கும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா தொழிற்சாலை மருத்துவமனையில் 3000 படுக்கைகள் உள்ளது. இதில் 45 சதவீத படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.