டெல்லி: 2024- 25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாக கூடும் என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில் டெலாய்ட் (Deloitte)நிறுவனம் சம்பளதாரர்களின் எதிர்ப்பார்ப்புகளையும், சில கணிப்புகளையும் வெளியிட்டிருக்கிறது.
வருமானவரி அடுக்குகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும், வீட்டு வாடகை அலொவென்ஸை உயர்த்த வேண்டும் என்பன அறிவிப்புகள் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என டெலாய்ட் நிறுவனம் கூறுகிறது.

இந்தியாவில் தற்போது புதிய வரிமுறை மற்றும் பழைய வரிமுறை என இரண்டு வரி நடைமுறைகள் அமலில் இருக்கின்றன. பழைய வரிமுறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நாம் வருமான வரிச் சலுகைகளை பெற முடியும். ஆனால் புதிய வரிமுறையில் அத்தகைய வருமானவரிச் சலுகை பிரிவுகள் கிடையாது.
இந்நிலையில் மக்கள் புதிய வரி நடைமுறைக்கு மாற வேண்டும் என்பதற்காக அரசு புதிய வரி நடைமுறையில் வருமான வரி உச்ச வரம்பினை 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக டெலாய்ட் நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
தற்போதுள்ள வீட்டு வாடகை அலொவென்ஸை அதிகரிக்க வேண்டும் என சம்பளதாரர்கள் எதிர்பார்ப்பதாக தெரிகிறது. ஏனெனில் தற்போது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வீட்டு வாடகை என்பது 30 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
எனவே தற்போது ஹெச்ஆர்ஏ என்பது ஒருவரது ஊதியத்தில் 20 முதல் 30 சதவீதமாக வழங்கப்படும் நிலையில், அதனை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் குறிப்பாக நகரப் பகுதிகளில் இந்த சலுகையை வழங்க வேண்டும் என ஊதியதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெட்ரோல் எரிபொருளுக்கு மாற்றாகவும் கார்பன் வெளியீட்டை குறைப்பதற்காகவும் மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80EEBஇன் கீழ் மின்சார வாகன கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி தொகைக்கு ஒரு ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம் என அறிவித்திருந்தது.
ஆனால் அது மார்ச் 2023 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்துவிட்டது. இந்த சலுகையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்றும் இந்த வரம்பினை 2 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்க வேண்டும் என்றும் சம்பளதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அனைவருக்கும் சொந்த வீடு என்ற ஒரு இலக்கை நிர்ணயம் செய்து அரசு திட்டங்களை வகுத்து வரும் நிலையில் அரசு இதற்கு முன்பு நடைமுறைப்படுத்திய அதாவது வீட்டுக் கடன்களுக்காக செலுத்தப்படும் வட்டிக்கு வரி விலக்கு வழங்கிய 80EEA பிரிவு மார்ச் 2022ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது . இதனை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை சம்பளதாரர்கள் முன்வைக்கின்றனர்.
story written by: Devika


Click it and Unblock the Notifications