இந்திய ஐடி துறையில் கடந்த 2 வருடமாக ஐடி ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருந்த காரணத்தால் ஒரு நிறுவனத்தில் வெளியேறும் ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது மட்டும் அல்லாமல் அதிகப்படியான சம்பளத்தில் பணியில் அமர்த்தி வந்தது.
இந்திய ஐடி, டெக், டிஜிட்டல் சேவை துறையில் கடந்த 2 வருடத்தில் 70 முதல் 120 சதவீதம் வரையில் சம்பள உயர்வு வாங்கியவர்கள் ஏராளம்.
இப்படியிருக்கையில் தற்போது நிலைமை மொத்தமாக மாறியுள்ளது ஐடி ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரெசிஷன் அச்சம்
உலகளவில் ரெசிஷன் அச்சம் அதிகரித்துள்ள நிலையில் டெக் சேவைக்காகப் புதிதாக முதலீடு செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது, இதனால் ஐடி சேவை துறையில் மந்த நிலை உருவாகும் எனக் கணிப்புகள் வெளியாகி வருகிறது. இதற்கான மாற்றம் இப்போதே தெரியத் துவங்கியுள்ளது.
2 வருடம்
குளோபல் ஸ்லோடவுன் மூலம் நிறுவனங்கள் புதிதாக நியமிக்கும் ஊழியர்களின் செலவுகளைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக ஐடி துறை ஆய்வாளர் கூறியுள்ளார். இதேபோல் கடந்த 2 வருடமாக அளிக்கப்பட்டு வந்த அதிகப்படியான சம்பள உயர்வுகள் அடுத்த நிதியாண்டு முதல் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள உயர்வு
தற்போது ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக வருடத்திற்கு 12 சதவீதம் வரையில் சராசரியாகச் சம்பள உயர்வு அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அளவீடு 9 சதவீதம் வரையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கொரோனாவுக்கு முந்தை அளவீடு என்பது குறிப்பிடத்தக்கது.
மலை ஏறும்
இதேபோல் முக்கியமான தொழில்நுட்பம், முக்கியப் பதவிகளுக்குப் புதிதாக ஒரு நிறுவனத்தில் சேரும் போது 70 -80 சதவீதம் வரையில் சம்பளம் உயரும் நிலை அடுத்த நிதியாண்டிலும் தொடரும் என்று ஐடி சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த அளவும் படிப்படியாகக் குறையும்.
அமெரிக்கா, ஐரோப்பா
மேலும் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் ரெசிஷன் அச்சம் அதிகரித்துள்ளதாலும், இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் அதிகப்படியான சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றைக் கொடுத்துள்ளதாலும் ராஜினாமா செய்யும் ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது என்றும் சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அட்ரிஷன் விகிதம்
இதன் மூலம் அடுத்தக் காலாண்டில் இருந்து டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், LTI, Mindtree ஆகிய நிறுவனங்களின் அட்ரிஷன் விகிதம் பெரிய அளவில் குறைய வாய்ப்பு உள்ளது.