இந்தியப் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தை கொரோனா-வால் விவரிக்க முடியாத அளவிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வர்த்தகப் பாதிப்பாலும், நிதிநெருக்கடியாலும் இந்தியாவில் பல கோடி ஊழியர்களின் வேலையைப் பறித்துத் தவித்து வருகின்றன. ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் இந்தியாவில் மொத்தமாக வேலைவாய்ப்பை இழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1.89 கோடியாக உள்ளது என CMIE அமைப்பின் தரவுகள் கூறுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் சராசரி சம்பள உயர்வின் அளவு வரலாறு காணாத விதமாகக் குறைந்து ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
2020 மோசமான வருடம்
2020 துவக்கம் முதல் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வந்த நிலையில் கொரோனா தற்போது பெரிய அளவில் இந்தியாவையும், இந்திய மக்களையும் பாதித்து வருகிறது.
இந்நிலையில் டெலாய்ட் நிறுவனம் Increments Trends என்ற தலைப்பில் செய்யப்பட்ட ஆய்வில், இந்தியாவில் 2020ஆம் ஆண்டுக்கான சராசரி சம்பள உயர்வு 3.6 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும், இது 2019ஆம் ஆண்டில் 8.6 சதவீதமாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளது.
40 சதவீத நிறுவனம்
இதுமட்டும் அல்லாமல் வெறும் 40 சதவீத நிறுவனங்கள் மட்டும் தான் இந்தியாவில் இந்தக் கொரோனா காலத்தில் சம்பள உயர்வைக் கொடுத்துள்ளது என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இதேபோல் 33 சதவீத நிறுவனங்கள் கொரோனா பாதிப்புகளைக் காரணமாக முன்வைத்து ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளது. மீதமுள்ள நிறுவனங்கள் சம்பள உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
சம்பள உயர்வு
2020ஆம் ஆண்டில் முழுமையாக இயங்கி வரும் தொழிற்சாலை நிறுவனங்கள் மட்டுமே தங்களது ஊழியர்களுக்குச் சராசரியாக 7.5 சதவீத சம்பள உயர்வைக் கொடுத்துள்ளது. 10 சதவீதத்திற்கும் குறைவான எண்ணிக்கை நிறுவனங்கள் மட்டுமே, 10%-க்கும் அதிகமாக அளவிற்குச் சம்பள உயர்வு கொடுத்துள்ளது.
10 சதவீதத்திற்கும் அதிகமான சம்பள உயர்வு கொடுக்கப்பட்ட நிறுவனங்கள் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் மிகவும் குறைவு என டெலாய்ட் நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகிறது.
நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள்
மார்ச் 2020 மாதத்திற்கு முன்னரே ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிர்ணயம் செய்யப்பட்ட நிறுவனங்கள் அதிக அளவிலான சம்பள உயர்வைக் கொடுத்துள்ளது. மற்ற நிறுவனங்கள் அனைத்தும் கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பை காரணம் காட்டி தாமதமாகவும், குறைவான சம்பள உயர்வையும் கொடுத்துள்ளது.
மேலும் 2020-21ஆம் நிதியாண்டில் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 20 சதவீத வருவாய்-ஐ இழக்கும் நிலையில் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.
லைஃப் சயின்ஸ்
இக்காலகட்டத்தில் லைஃப் சயின்ஸ் மற்றும் பார்மா நிறுவனங்கள் மட்டுமே தங்களது ஊழியர்களுக்கு இரண்டு இலக்கை சம்பள உயர்வைக் கொடுத்துள்ளது. எப்போதும் அதிகளவில் சம்பள உயர்வைக் கொடுக்கும் டிஜிட்டல் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் கூட இந்த வருடம் முழுமையான சம்பள உயர்வைக் கொடுக்கத் தடுமாறியுள்ளது.
மேலும் உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் இருக்கும் நிறுவனங்கள் தான் இந்த வருடம் மிகவும் குறைவான சம்பள உயர்வைக் கொடுத்து ஊழியர்கள் அதிர்ச்சி கொடுத்துள்ளது.