டெல்லி: ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா ஆலையை, ஆப்பிள் சார்ஜர் தயாரித்து வரும் சால்காம்ப் நிறுவனம் எடுத்து நடத்த உள்ளதாகவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தி துவங்கும் என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
செல்போன்கள் எல்லோரது கைகளில் தவழ ஆரம்பித்த காலம் என்றால் அது 2006-2007 என்று சொல்லாம் அப்போது, நோக்கியா நிறுவனத்தின் 1100 மாடல் போன்கள் தான் எல்லோரிடமும் இருந்தது. செங்கல் வடிவில் இருந்த அந்த போன் பல ஆண்டுகாலம் எல்லோருக்கும் உழைத்தது.
நோக்கியா நிறுவனம் செல்போன் உற்பத்தி புரட்சியை தொடங்கியது தமிழகத்தில் இருந்து தான். சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தான் நோக்கியா நிறுவனம் 2016ம் ஆண்டு ஆலையை துவக்கியது. . 2008-2009ல் இது மிகப்பெரிய மொபைல் உற்பத்தி ஆலையாக மாறியது. பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றனர்.
நோக்கியா போன்கள்
இதற்கிடையே 2010ம் ஆண்டு ஸ்மார்ட்போன்கள் வர ஆரம்பித்து. முதலில் ஆப்பிள் நிறுவனமும் அதனை தொடர்ந்து சம்சாங், மைக்ரோமேக்ஸ் என அடுத்தது பெரிய நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை களம் இறக்கின. 2ஜி சேவைகள், 3ஜி ஆக மாறின. இந்நிலையில் நோக்கியா நிறுவனத்தின் 2ஜி போன்களுக்கு கிடைத்த வரவேற்பு, 3ஜி போன்களுக்கு கிடைக்கவில்லை.
நோக்கியா சிக்கல்
இதனால் அந்த நிறுவனம் உற்பத்தியை குறைத்து வந்தது. இத்துடன் வரி பிரச்சனையும் சேர்ந்தது. 2013ல் இங்கு உற்பத்தி செய்ய போன்களை ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக உள்ளூர் சந்தையில் விற்ற காரணத்தால் அதற்கான விற்பனை வரியாக ரூ. 2,400 கோடியை தமிழக அரசுக்குச் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. வரவேற்பு குறைவு மற்றும் வரி சிக்கல் போன்ற காரணங்களால் ஆலையை தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு நோக்கியா தள்ளப்பட்டது.
கைவிட்டது
அதன் பின்னர், நோக்கியாவை விலைக்கு வாங்கிய மைக்ரோ சாப்ட் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் இந்த நிறுவனத்தை சிறிது காலம் ஏற்று நடத்தியது. வரி சிக்கலுக்கு பிறகு ஆட்குறைப்பு செய்யப்பட்டு, இறுதியாக 850 ஊழியர்கள் பணியாற்றினர். ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனமும் கைவிட்டதால், 2014 நவம்பர் 1ம் தேதி ஆலை நிரந்திரமாக மூடப்பட்டது.
சால்காம்ப் முதலீடு
இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறுகையில், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் எக்ஸ்ஆர் மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்து. இந்த போன் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் உள்ளூரிலும் விறக்கப்பட உள்ளது. தமிழகத்தின் சென்னையை அடுத்த பெரும்புதூரில் பல ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ள நோக்கியா ஆலையை, சால்காம்ப் என்ற நிறுவனம் ஏற்று நடத்த ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐபோன் சார்ஜர் தயாரிப்பு
இந்த நிறுவனம் செல்போன் உதிரிபாகங்கள் மற்றும் ஐபோன்களுக்கு சார்ஜர் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தியை துவக்கும். இதனால் நேரடியாக 10,000 பேரும் மறைமுகமாக 50,000 பேரும் வேலைவாய்ப்பு கிடைக்கும், இதற்காக 2000 கோடியை அந்நிறுவனம் முதலீடு செய்கிறது" என்றார்.