சேலம்: ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட Greenko குரூப், தமிழ்நாட்டில் மூன்று பம்ப் ஸ்டோரேஜ் திட்டங்களை அமைக்க தமிழ்நாடு அரசுடன் கடந்த மாதம் ஒப்பந்தம் செய்தது அனைவருக்கும் நினைவிருக்கும். இதில் முதல் திட்டம் சேலம் மாவட்டத்தில் மேட்டூரில் அமைக்கப்பட உள்ளது, இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 5,947 கோடி என கூறப்படுகிறது.
சேலம், நாமக்கல், ஈரோடு, ஆகிய மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது மேட்டூர் அணை தான், இந்த அணையில் இருக்கும் நீர் ஆதாரத்தை நம்பி கிரீன்கோ குரூப் பம்ப் ஸ்டோரேஜ் திட்டத்தை அமைக்க உள்ளது.

பம்ப் ஸ்டோரேஜ் என்பது ஒரு வகையான மின்சார சேமிப்பு திட்டமாகும். இது நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முறையை தலைகீழாக மாற்றுகிறது. இதில், நீர் குறைந்த மட்டத்தில் இருந்து உயர் மட்டத்திற்கு பம்ப் செய்யப்படுகிறது. பின்னர், மின்சாரம் அதிகம் தேவைப்படும் போது, இந்த உயர் மட்டத்தில் இருந்து நீர் கீழே விடப்பட்டு, அதன் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
அதாவது இந்த பம்ப் ஸ்டோரேஜ் திட்டம், இரு மட்டத்தில் நீர் தேக்கத்தை வைத்துக்கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை. தண்ணீரை குறைந்த மட்டத்தில் இருந்து, உயர் மட்டத்திற்கு ஒரு செயற்கை குளத்திற்கு தண்ணீர் பம்ப் செய்யப்படுகிறது. இதற்கு மின்சாரம் தேவைப்படுகிறது.
இதை தொடர்ந்து மின்சாரம் அதிகம் தேவைப்படும் போது, உயர் மட்டத்தில் இருந்து நீர் கீழே விடப்படுகிறது. இந்த நீரின் ஈர்ப்பு சக்தி டைனமோவை சுழற்றுகிறது, இது மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
கிரீன்கோ குரூப், தமிழ்நாடு அரசாங்கத்துடன் கடந்த மாதம் ஒரு புரிந்துணர்நு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி மூன்று திட்டங்களும் திருப்பத்தூர், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதன் மொத்த மின்சார உற்பத்தி திறன் 3.3 GW ஆகும்.
கிரீன்கோ, இந்தியாவில் 100 GWh க்கும் அதிகமான மின்சார சேமிப்பு திறனை உருவாக்கி வருகிறது. இது தனது வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேரம் கார்பன் உமிழ்வு இல்லாத மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவும். தற்போது இக்குழுமம் மத்திய பிரதேச மாநிலத்தின் நீமுச் மாவட்டத்தில் உள்ள கீம்லா பகுதியில் இந்தியாவின் மிகப்பெரிய பம்ப் ஸ்டோரேஜ் திட்டத்தைக் கட்டியுள்ளது. சுமார் 7.5 மணிநேரத்திற்குத் தேவையான மின்சார சேமிப்புடன் 1.44 GW திறன் கொண்ட இந்த தளம், தினசரி 11 GWh வழங்கும் திறன் கொண்ட 1.92 GW ஆக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
கிரீன்கோ, இந்தியாவில் 15 மாநிலங்களில் 7.5 GW பம்ப் ஸ்டோரேஜ், சோலார் மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி திறன் கொண்ட கட்டமைப்பை வைத்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்குள் 50 GWh சேமிப்பு திறன் செயல்படும். அடுத்த சில ஆண்டுகளில் மேலும் 50 GWh சேமிப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொழிற்துறை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் மின்சாரத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய மாநில அரசு தீவிரமாக பணியாற்றினாலும் இந்த மின்சாரத்தை பசுமை மின்சாரமாக உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் வாயிலாகவே 3 பம்ப் ஸ்டோரேஜ் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications