கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலம் நெருங்கும் இந்த வேளையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் மீண்டும் ஆட்குறைப்பு அலை வீசுவது ஊழியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த முறை தொழில்நுட்ப துறையின் முக்கிய நிறுவனங்களான சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce) மற்றும் ஆரக்கிள் (Oracle) ஆகியவை வேலை நீக்கத்தை அறிவித்துள்ளன.
AI-யை காரணம் காட்டும் சேல்ஸ்ஃபோர்ஸ் : கிளவுட் சேவை வழங்குநரான சேல்ஸ்ஃபோர்ஸ், தனது வாடிக்கையாளர் ஆதரவுப் பிரிவில் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 9,000 ஊழியர்களை கொண்ட இந்தப் பிரிவை 5,000 ஊழியர்களாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 3ஆம் தேதி மட்டும் வாஷிங்டன் மாகாணத்தில் 100 பேர் வரை வெளியேற வேண்டியிருந்தது. இந்த ஆட்குறைப்புக்கு, செயற்கை நுண்ணறிவு தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குறைவான ஊழியர்களே போதும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் பெனியோஃப் தெரிவித்துள்ளார்.
ரூ.13,300 கோடி மறுசீரமைப்புத் திட்டம்: ஆரக்கிள் நிறுவனமும் அதன் 1.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.13,300 கோடி) மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் ஆட்குறைப்பை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடந்த பணிநீக்கங்களுக்காக 451 மில்லியன் டாலர் செலவிடப்பட்ட நிலையில், இன்னும் 10,000 பணியிடங்கள் வரை பாதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், நவம்பர் 3ஆம் தேதி வாஷிங்டன் மாகாணத்தில் மட்டும் 260 ஊழியர்கள் ஆரக்கிள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இறுதியில் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பாதிக்கும் ஒரு பெரிய ஆட்குறைப்பு போக்கின் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்புகள் அமைந்துள்ளன. அமேசான் நிறுவனம் 14,000 கார்ப்பரேட் ஊழியர்களை நீக்கியது. டார்கெட் 1,800 வேலைகளை குறைத்தது. யுபிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் சுமார் 48,000 பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. கார் தயாரிப்பு நிறுவனமான ஜிஎம் மற்றும் பீர் தயாரிப்பு நிறுவனமான மோல்சன் கூர்ஸ் போன்றவையும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகப் பணிகளில் ஊழியர்களை குறைத்துள்ளன.
பணிநீக்கத்திற்கு உண்மையில் AI தான் காரணமா..?:தங்கள் செயல்பாடுகளை நவீனப்படுத்த AI உதவுவதால், குறைவான ஊழியர்கள் போதுமானவர்கள் என்று பல தொழில்நுட்ப நிறுவனங்கள் கூறுவதையே பணி நீக்கத்திற்கான காரணமாக முன்வைக்கின்றன. மெட்டா நிறுவனம் கூட, AI-யால் ஒவ்வொரு ஊழியரும் அதிக பொறுப்புகளைச் சுமக்க முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், இந்த ஆட்குறைப்புக்கு AI தான் உண்மையான காரணம் என்பதில் விமர்சகர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். ஆக்ஸ்போர்டு இன்டர்நெட் இன்ஸ்டிடியூட்டின் பேராசிரியர் ஃபேபியன் ஸ்டெஃபானி கூறுகையில், "தற்போது நடக்கும் ஆட்குறைப்புகளுக்கு AI-யால் கிடைத்த உண்மையான செயல்திறன் அதிகரிப்புதான் காரணம் என்பதில் எனக்குச் சந்தேகம் உள்ளது" என்று தெரிவித்துள்ளர்.
மேலும், இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் தவறாக அதிக ஊழியர்களை நியமித்துவிட்டோம் என்று நிறுவனங்கள் ஒப்புக்கொள்வதற்கு பதிலாக, இப்போது AI மீது அவர்கள் பழி போடுகின்றனர். நீண்ட காலத் திட்டமிடல் இல்லாமல் பணியமர்த்தப்பட்டவர்களை நீக்க, "இது AI காரணமாகத்தான்" என்று நிறுவனங்கள் காரணம் கூறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications