இந்தியாவின் மிகப் பெரிய செல்வம், கணக்கில் வராமல் கறுப்புப் பணமாக, வெளிநாடுகளில் எங்கோ பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என ரஜினியின் சிவாஜி படத்தில் இருந்து பார்த்து வருகிறோம்.
கறுப்புப் பணம் என்கிற வார்த்தைக்கான விளக்கமே பலருக்கு இன்னும் குழப்பம் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அதை சாமானிய மக்களால் வரையறுத்துக் கொள்ள முடியவில்லை.
சமீபத்தில் கூட முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் "கறுப்புப் பணம் எங்கோ பதுக்கி வைத்திருக்கும் பொருள் அல்ல, அது மக்களோடு மக்களாக புழங்கிக் கொண்டு இருக்கிறது" எனச் சொல்லியதும் நினைவில் இருக்கலாம். சரி மேட்டருக்கு வருவோம்.
காமெடி சம்பவம்
இப்படி கறுப்புப் பணம் என ஒன்று இருக்கிறது, அதை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும், இனியும் கறுப்புப் பணம் உருவாகாமல் தடுக்க வேண்டும் என அரசு அமைப்புகள் படு தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டு இருக்கின்றன. இப்போது அந்த கறுப்புப் பணம் தொடர்பாக ஒரு காமெடியும் நடந்து இருக்கிறது.
ஒரே பெயர்
ஹிகும் சிங் என்கிற பெயரில், மத்தியப் பிரதேசத்தில் இரண்டு நபர்கள் இருக்கிறார்கள். இதில் ஒருவர் ருராய் கிராமத்தைச் சேர்ந்தவர், மற்றொருவர் ரோனி கிராமத்தைச் சேர்ந்தவர். இரண்டு பேருமே எஸ்பிஐ வங்கி ஆலம்பூர் கிளையில், சமீபத்தில் தான் சேமிப்புக் கணக்குக்காக விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
சிறு தவறு
வங்கி அதிகாரிகளும், இரண்டு பேரிடமும் தேவையான அடையாள விவரங்கள் மற்றும் டாக்குமெண்டுகளை வாங்கிக் கொண்டு கணக்கைத் தொடங்கிக் கொடுத்தார்கள். ஆனால் ஒரு சிறிய தவறு செய்து விட்டார்கள். இரண்டு பேருக்குமே ஒரே கணக்கைக் கொடுத்து விட்டார்கள். இப்போதே கிட்டத்தட்ட கதை புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
வேலை
வங்கிக் கணக்கைத் தொடங்கிய பின் கொஞ்ச நாளிலேயே ருராய் கிராமத்தைச் சேர்ந்த ஹிகும் சிங் ஹரியானா மாநிலத்துக்கு போய்விட்டார். அங்கு வேலை பார்த்து கிடைத்த பணத்தை நேரடியாக தன் எஸ்பிஐ வங்கிக் கணக்கில் போடத் தொடங்கினார். இப்படி சுமாராக 1,40,000 ரூபாய் சேமித்து இருக்கிறார்.
ஜாலி தான்
மறு பக்கம், ரோனி கிராமத்தைச் சேர்ந்த ஹிகும் சிங் தொடர்ச்சியாக, தன் வங்கிக் கணக்கில் பணம் வந்து கொண்டு இருப்பதை கவனித்தார். எடுத்து தாம் தூம் என செலவழிக்கத் தொடங்கிவிட்டார். இப்படி சுமாராக கடந்த 6 மாதங்களில் 89,000 ரூபாயை செலவழித்து விட்டார் நம் ரோனி கிராமத்தைச் சேர்ந்த ஹிகும் சிங்.
உழைத்தவர்
ஒரு பணத் தேவை ஏற்பட்டதால், ஹரியானா மாநிலத்துக்குச் சென்று வேலை பார்த்து வந்த ருராய் கிராமத்தைச் சேர்ந்த ஹிகும் சிங், தன் எஸ்பிஐ வங்கியில் பணம் எவ்வளவு இருக்கிறது என பார்த்த போது ஆச்சர்யம் சுமார் 35,400 ரூபாய் மட்டுமே இருந்து இருக்கிறது.
வங்கி முறையீடு
வங்கியிடம் வந்து தன் தரப்பு பிரச்னையை விளக்கி விசாரிக்கிறார். அப்போது தான் ருராய் மற்றும் ரோனி கிராமத்தைச் சேர்ந்த ஹிகும் சிங்குகளுக்கு ஒரே வங்கிக் கணக்கு எண் கொடுத்து இருப்பது தெரிய வருகிறது. ரோனி கிராமத்தை சேர்ந்த ஹிகும் சிங்கை அழைக்கிறார்கள்.
எல்லாம் பிரதமர் செயல்
ரோனி கிராமத்தைச் சேர்ந்த ஹிகும் சிங்கிடம் விசாரித்த போது "பிரதமர் தான் கறுப்புப் பணத்தை மீட்டு, என் எஸ்பிஐ வங்கிக் கணக்கில் போடுகிறார் என நினைத்தேன். எனக்கும் பணத் தேவை இருந்தது. ஆகையால் தான் பணத்தை எடுத்து செலவு செய்தேன்" என ஒரே போடாக போட்டு இருக்கிறார்.
கதறல்
வங்கி அதிகாரிகள் கொஞ்சம் மெத்தனமாக செய்த காரியத்தால், இன்று ஒரு பெரிய தொகையை இழந்து இருக்கிறார் ருராய் கிராமத்தைச் சேர்ந்த ஹிகும் சிங். இந்த கொடுமையை வெளியில் வர விடாமல் வேறு தடுத்ததாகச் சொல்கிறார் ருராய் கிராமத்தைச் சேர்ந்த ஹிகும் சிங்.
என்ன செய்ய
இந்த தவறை ஆலம்பூர் எஸ்பிஐ வங்கி அதிகாரிகளும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது ருராய் கிராமத்தைச் சேர்ந்த ஹிகும் சிங்குக்கு யார் பணம் கொடுப்பார்கள். யாரிடம் இருந்து பணத்தை வசூலிப்பார்கள் என்கிற விவரங்களை வெளியிடவில்லை. பின்ன பிரதமரையே, தன் பக்கம் இழுத்து இருக்கிறார் என்றார் வங்கி அதிகாரிகள் என்ன செய்வார்கள்..?
கவனம் தேவை
அரசு வங்கிகள் தான் இந்திய வெகு ஜன மக்களின் நிதி புகழிடம். அந்த அரசு வங்கிகளே இத்தனை மெத்தனமாக செயல்பட்டு, கூலி வேலை செய்து பிழைக்கும் ருராய் ஹிகும் சிங்குக்கு சுமார் 89,000 நஷ்டம் ஏற்படுத்தினால் எப்படி..? அரசு வங்கிகள் இன்னும் கவனமாக செயல்பட வேண்டும். அதை அரசும் உறுதிப்படுத்த வேண்டும். செய்வார்கள் என நம்புவோம்.