இந்தியாவில் தங்களது மொபைல் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்காக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், ஆப்பிள் இன்க் உள்ளிட்ட 22 நிறுவனங்கள், 110 பில்லியன் ரூபாயினை முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன.
இது குறித்து வெளியான ஒரு செய்தியில், ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமம், விஸ்ட்ரான் கார்ப் மற்றும் பெகட்ரான் கார்ப், பல ஐபோன் அசெம்பிளர்கள் என பலரும் இதில் அடங்கும்.
இதன் மூலம் இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 11.5 லட்சம் கோடி மதிப்புள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக, மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு கிடைக்கும்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் 11.5 லட்சம் கோடி மதிப்புள்ள செல்போன் உதிரி பாகங்களில், 9 லட்சம் கோடி மதிப்புள்ள உதிர் பாகங்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் பிரசாத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் 3 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகளும், 9 லட்சம் பேருக்கு மறைமுக வாய்ப்புகளும் கிடைக்கும்.
எந்தெந்த நிறுவனங்கள்
ஆப்பிள், சாம்சங், ஃபாக்ஸ்கான், பெக்ட்ரான், லாவா, ரைஸிங் ஸ்டார், விஸ்ட்ரோன் ஐபோன் அசெம்ப்ளர்கள் உள்ளிட்ட 22 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் கொரோனாவினால் விநியோக சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் சீனாவினை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளன. இதில் சில நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது உற்பத்தியினை தொடங்கியுள்ளன.
எந்தெந்த நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள்
அரசின் இந்த ஊக்கத் திட்டத்தின் கீழ் உற்பத்தியைத் தொடங்க விண்ணப்பித்துள்ள நிறுவனங்கள், தைவான், தென் கொரியா, ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இதில் அடங்கும்.
உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை பெற விரும்பும் வெளி நாட்டு நிறுவனங்கள், 15,000 ரூபாய் மற்றும் அதற்கு அதிகமான விலை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊக்கத் தொகை
இந்தியாவில் மொபைல்போன் உற்பத்தியை தொடங்கும் இந்த நிறுவனங்களுக்காக, மத்திய அரசு 41,000 கோடி ரூபாயை உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக ஒதுக்கியுள்ளது.
இந்த சலுகையைப் பெற 22 நிறுவனங்கள் ஆர்வத்துடன் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வந்துள்ள நிலையில், இந்த திட்டத்தின் மூலமாக 2025-ல் இத்துறையின் உற்பத்தி வருவாய் 10 லட்சம் கோடி ரூபாயை தொடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இது நல்ல வாய்ப்பு தான்
இதன் மூலம் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி விகிதத்தினை அதிகரிப்பதோடு, வேலை வாய்ப்பினையும் பெருக்க முடியும். மேலும் நலிவடைந்து போயுள்ள பொருளாதாரத்தினை மேம்படுத்த இது நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மையில் இந்தியாவுக்கு இது மிக நல்ல விஷயமே..