இன்றைய நாளில் ஸ்மார்ட்போன், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷிங் இப்படி ஏராளமான எலக்ட்ரானிக் பொருட்கள் என்றாலே, நமக்கெல்லாம் நினைவில் வருவது சாம்சங் தான்.
இன்றைய இளைஞர்களின் பெரும்பாலானவர்களின் விருப்பத் தேர்வு சாம்சங் தான்.
அப்படி உலகம் முழுவதும் விருப்பமான தேர்வாக இருக்கும் சாம்சங் ராஜ்ஜியத்தின் தலைவர் தான் லீ குன் ஹீ.
உலகிற்கே பெரும் இழப்பு
78 வயதான லீ குன் ஹீயை ஒரு காலகட்டத்தில் வர்த்தக ரீதியாக விஞ்ச ஆளே இல்லை எனலாம். ஒட்டுமொத்த உலகையும் தனது வணிக திறமையால் தன்பக்கம் ஈர்த்தவர். உண்மையில் தென் கொரியாவிற்கு இது மிகப்பெரிய இழப்பு தான். ஏன் ஒட்டுமொத்த உலகிற்கும் லீ குன் ஹீ இறப்பு பெரும் இழப்பு தான்.
சர்வதேச எலக்ட்ரானிக்ஸ் வர்த்தகத்தின் தந்தை
இன்றைய நாளிலும் சாம்சங் என்றாலே தனித்துவமான தரமும், விலையும் மக்களை ஈர்த்துள்ளது. அது இந்தியா, அமெரிக்கா போன்ற மிகப்பெரிய நாடுகளில் முன்னணி பிராண்டாக வலம் வந்து கொண்டுள்ளது எனலாம். சீனாவுக்கு சரியான போட்டியாளராகவும் இருந்து வருகிறது. இப்படி சர்வதேச எலக்ட்ரானிக்ஸ் வர்த்தகத்தின் தந்தையாக இருந்தவர் தான் லீ குன் ஹீ.
யார் இந்த லீ குன் ஹீ
தென் கொரியாவின் சிறந்த பிசினஸ் மேனாக திகழ்ந்த Lee Kun-hee, ஜனவரி 9,1942ல் தென் கொரியாவில் பிறந்தவர். 1987 முதல் 2008, 2010 - 2020 வரையில் சாம்சங்கின் தலைவராக இருந்தவர். அது மட்டும் அல்ல சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் உறுப்பினராகவும் இருந்தவர். இவரின் சொத்து மதிப்பு சுமார் 40.8 பில்லியன் டாலர்களாகும்.
கல்விப்பருவம்
1953ல் தனது மேல் படிப்புக்காக ஜப்பான் சென்றுள்ளார். இந்த நிலையில் 1965ல் வணிகம் சம்பந்தமான பட்டதாரி படிப்பினை வசேடா பல்கலைக் கழகத்திலும் (Waseda University) பயின்றுள்ளார். 1966ல் தனது எம்பிஏ படிப்பினை ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துள்ளார். படிப்பை முடித்த கையோடு தான், லீ குன் முதன் முதலாக சாம்சங் குழுமத்தில் 1968ல் இணைதுள்ளார்.
சாம்சங்கில் முதல் அடி வைத்த லீ குன்
1968ல் சாம்சங்கில் இணைந்திருந்தாலும், அவரின் தந்தை இறந்த பிறகு தான் 1987ல் தலைவராக பதவியேற்றுள்ளார். 1978ல் சாம்சங் சிடி கார்ப்பரேஷன் துணைத் தலைவராகவும், 1979ல் சாம்சங் குழுமத்தின் துணைத் தலைவராகவும் முன்னேறியுள்ளார். இதற்கிடையில் தான் 1993ம் ஆண்டில் சாம்சங் நிறுவனம் தனக்கென புதிய அடையாளத்தினை உருவாக்கியது.
தனது வாழ்நாள் முழுவதும் சாம்சங் தான்
இந்த நிலையில் தான் 1998ல் சாம்சங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், தலைவராகவும் இருந்தார். இப்படி படிப்படியாக தனது ஆரம்ப காலம் முதல் கொண்டே தனது வாழ்நாள் முழுக்க சாம்சங்கிற்காக செலவிட்டவர் தான் லீ குன்.
1993-களில் சாம்சங் குழுமம் அதிக தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தியது.
கொரியாவின் சக்தி வாய்ந்த மனிதர்
இபப்டி தரத்திலும் விற்பனையையிலும் பட்டையை கிளப்பிய லீ குன், ஏப்ரல் 2008ல், சாம்சங்கில் நடந்த நிதி ஊழல் பிரச்சனை காரணமாக தனது பதிவியினை ராஜினாமா செய்தார். பின்னர் மார்ச் 24, 2010ல் மீண்டும் சாமசங்கிற்கே திரும்பினார். உலகின் மிக சக்தி வாய்ந்த நபர்களின் போர்ப்ஸ் பட்டியலில் 35வது மிக சக்தி வாய்ந்த நபராக லீ குன் இணைக்கப்பட்டார். இதனாலேயே மிகவும் சக்தி வாய்ந்த கொரிய மனிதனாராகவும் இருந்து வந்தார்.
தென் கொரிய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு
1990-களில் சாம்சங் நிறுவனம் மெமரி சிப் உருவாக்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில் ஜப்பான், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களைத் தாண்டி வளர்ந்தது. இதற்கிடையில் 2000-ம் ஆண்டுகளில் தன் செல்போன் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக உருவாகியது. இன்று தென்கொரியாவின் பொருளாதாரத்தில் சாம்சங் எலக்ரானிக்ஸ் முக்கிய நிறுவனமாக உள்ளது.
அதுமட்டும் அல்ல இன்றளவில், சர்வதேச நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அதிக பணம் செலவிடும் நிறுவனமாக சாம்சங் உள்ளது.
இன்று மறைவு
இந்த நிலையில் தான், இன்று காலையில் லீ குன் உயிரிழந்ததாக சாம்சங் குழுமம் அறிவித்துள்ளது. இருப்பினும், அவருடைய இறப்புக்கான காரணம் என்னவென்ற முழு விவரங்கள் தெரியவில்லை. இவருக்கு ஏற்கனவே 1990-களில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பிருந்து மீண்டிருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு நெஞ்சுவலியில் காரணமாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.