ஸ்மார்ட்போன் உலகின் ஜாம்பவான் ஆன சாம்சங் நிறுவனம், இந்தியாவில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் பெரும்பாலானோரின் இஷ்டமாக இருப்பது சாம்சங் தான். ஏனெனில் விலையும் ஏதுவாக இருக்கும், அதேசமயம் மக்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் உள்ளது.
இந்த நிலையில் தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில், சீன நிறுவனங்கள் நுழைந்ததையடுத்து விற்பனையும் குறைந்துள்ளது. மேலும் விலையையும் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிரடியான முடிவு
இவ்வாறு கடுமையான வீழ்ச்சியினை கண்ட சந்தைகளுக்கு மத்தியில் சாம்சங் இப்படி அதிரடியான முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் சந்தையில் நிலவி வரும் போட்டியினை சமாளிக்க சாம்சங் நிறுவனம், நிறுவனத்தை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது ஒன்றும் இதற்கு புதிதல்ல, ஏனெனில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இதுபோன்ற அறிவிப்பை இந்த நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
உயர்மட்ட அதிகாரிகள் ராஜினாமா
சில ஆதாரங்களின் படி, இந்த பணி நீக்கம் தவிர அதன் உயர்மட்ட நிர்வாகிகள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக சாம்சங் இந்தியாவின் சந்தைப்படுத்துதல் அதிகாரி ரஞ்சிவ்ஜித் சிங் மற்றும் டிவிஷனல் பிசினஸ் ஹெட் சுகேஷ் ஜெயின் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடுமையான போட்டி
ஸ்மார்ட்போன் சந்தையில் நிலவி வரும் கடுமையான போட்டியின் காரணமாக, சாம்சங் நிறுவனம் தனது முதல் இடத்தை சீனாவின் ஜியோமிடம் பறிகொடுத்தது. மேலும் சமீபகால கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆக இப்படி ஒரு நிலையில் தான் நிறுவனத்தை சீரமைக்கும் பொருட்டு பணி நீக்கம் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.
லாபம் வீழ்ச்சி
கடந்த 2016லியே சாம்சங் நிறுவனத்தின் இடத்தை ஜியோ பிடித்துக் கொண்டது. இந்த நிலையில் தொடர்ந்து தனது லாபத்தை பறிகொடுத்து வருகிறது சாம்சங். சொல்லப்போனால் கடந்த 2018ம் நிதியாண்டில் 3,713 கோடி ரூபாய் லாபம் கண்ட சாம்சங், 2019ம் நிதியாண்டில் சுமார் பாதியாக குறைந்து 1,540 கோடி ரூபாய் மட்டுமே கண்டுள்ளது. கிட்டதட்ட இது 59 சதவிகித வீழ்ச்சியாகும்.
சாம்சங் தனது இடத்தை இழந்துவிட்டது
ப்ரீமியம் ஹேண்ட்செட் பிரிவில் சாம்சங் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள தவறி விட்டது என்றும், இதுவே இந்த நிறுவனம் இந்த அளவுக்கு வீழ்ச்சி காண முதல் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் சந்தையில் மிகப்பெரிய லாபத்தை ஈட்டும் முக்கிய பிரிவு இதுதான் என்றும் கூறப்படுகிறது. அதிலும் 30,000 ரூபாய் விலைப் பிரிவில் சாம்சங் நிறுவனம், ஆப்பிள் மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களுக்கு பின்னாலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற நிறுவனங்களும் அப்படி தான்
சாம்சங்கை போல் அல்லாமல் மற்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒப்பந்த ஊழியர்கள் தான் உள்ளனர். உதாரணத்திற்கு ஜியோமியில் இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மட்டுமே பணி புரிகின்றனர். ஏனெனில் அதன் உற்பத்தி நடவடிக்கைகள் அனைத்தும் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டவை. இதே ஜியோமி மற்றும் சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்தப்படியாக அடுத்தடுத்த இடங்களில் உள்ள ஒப்போ மற்றும் விவோ கூட பணியாளர்களை அவ்வப்போது பகுத்தறிவு செய்து வருகின்றன என்றும் கூறப்படுகிறது
2017 – 2018லியே சரிவு தொடங்கியது?
சாம்சங் இந்தியா கடந்த 2017 -2018ம் ஆண்டிலேயே சரிவினை காணத் தொடங்கியது. எனினும் ஆரம்பத்தில் நிகர லாபத்திலேயே சரிவைக் காண தொடங்கியது. குறிப்பாக கடந்த 2018ம் நிதியாண்டில் நிகரலாபம் 10.7 சதவிகிதம் குறைந்து, 3712 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது.எனினும் வருவாய் 61,065 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது. ஆனால் 2019ம் ஆண்டில் இதைவிட குறைந்து வெறும் 1,540 கோடி ரூபாய் லாபத்தினை மட்டுமே கண்டுள்ளது. இதனால் சாம்சங் தொடர்ந்து நெருக்கடியில் உள்ளதை அறிய முடிகிறது.