ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமான SAP வியாழக்கிழமை இந்நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரெசிஷன் அச்சம் காரணமாக உலகளவில் அனைத்து முன்னணி டெக் சேவை நிறுவனங்களும் பணிநீக்கம் அறிவித்து வருகிறது. சந்தை சூழ்நிலைகளைப் பொருத்து பார்த்தால் முதல் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் தான் முதலில் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு இருக்க வேண்டும். அமெரிக்கா, ஆசிய பொருளாதாரத்தைக் காட்டிலும் ஐரோப்பாவின் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை அமெரிக்காவின் ஐபிஎம் 3900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில் இன்று ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த SAP தனது உலகளாவிய ஊழியர்களில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 3,000 ஊழியர்களைப் பணிக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
SAP நிறுவனம்
ஜெர்மனி நாட்டின் வால்டோர்ஃப் என்னும் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் SAP ஐரோப்பா மட்டும் அல்லாமல் இந்தியா, அமெரிக்கா என உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தனது மிகப்பெரிய அலுவலகத்தைப் பெங்களூரில் வைத்திருந்தாலும், கூர்கான், புனே, மும்பை, ஹைதராபாத் என மொத்தம் 5 நகரங்களில் அலுவலகத்தை வைத்துள்ளது.
என்டர்பிரைஸ் சாப்ட்வேர்
SAP நிறுவனம், பிற மென்பொருள் சேவை நிறுவனங்களைப் போல் அல்லாமல் நிறுவனங்களை நிர்வாகம் செய்யவும், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்குமான என்டர்பிரைஸ் சாப்ட்வேர் மற்றும் கிளவுட் அடிப்படையிலான கம்ப்யூட்டிங் சேவைகளை வழங்கி வருகிறது.
மறுசீரமைப்புத் திட்டம்
இந்த நிலையில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் SAP நிறுவனம் தனது கோர் பிசினஸ்-ஐ வலுப்படுத்தவும், நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தவும் முக்கியமான பிரிவுகளைக் குறிவைத்து மறுசீரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என அறிவித்துள்ளது.
2.5 சதவீதம் பேர் பணிநீக்கம்
இந்த நடவடிக்கையின் மூலம் SAP நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 2.5 சதவீதம் பேர் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை SAP நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர முடிவுகளை வெளியிடும் போது தெரிவித்தது.
3,000 ஊழியர்கள் பணிநீக்கம்
SAP நிறுவனத்தின் உலாவிய வர்த்தகத்தில் சுமார் 1,20,000 ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது முக்கியமான பிரிவுகளைக் குறிவைத்துச் செயல்படுத்தப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் 3,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்.
லிஸ்ட் நீண்டது
கடந்த 4 மாதங்களாக டெக் துறையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் மெட்டா, அமேசான், கூகுள், ஐபிஎம், மைக்ரோசாப்ட் எனப் பல முன்னணி நிறுவனங்கள் பொருளாதார வீழ்ச்சிக்கு முன்பே பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், தற்போது SAP நிறுவனமும் இணைந்துள்ளது.
செலவும் சேமிப்பும்
இந்த 3000 ஊழியர்கள் பணிநீக்கம் மூலம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 250 முதல் 300 மில்லியன் யூரோ வரையில் நிறுவனத்திற்குக் கூடுதல் செலவாகும். இதேவேளையில் மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் 2024 முதல் 300-350 மில்லியன் யூரோக்கள் வருடாந்திர சேமிக்க முடியும் என SAP நிர்வாகம் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications