ஜெர்மன் நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான SAP இந்தியாவில் அதிகளவிலான ஊழியர்களுடன் பெரிய அளவிலான வர்த்தகத்தைச் செய்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரில் இருக்கும் SAP நிறுவன அலுவலகத்தில் 2 ஊழியர்களுக்கு H1N1 வைரஸ்-ல் பாதிக்கப்பட்டது உறுதியான நிலையில் SAP நிறுவன நிர்வாகம் பெங்களூர் அலுவலகத்தை மட்டும் அல்லாமல் இந்தியாவில் இருக்கும் அனைத்து அலுவலகத்தையும் மூட உத்தரவிட்டுள்ளது.
இந்தச் செய்தி பெங்களூரில் இருக்கும் சக ஐடி நிறுவனங்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டும் அல்லாமல் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் ஊழியர்கள்
இந்தியாவில் மென்பொருள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கு ஒரு தலைநகரம் என்றால் அது பெங்களூரு தான். ஒவ்வொரு நாளும் பல நூறு கோடி ரூபாய் மதிப்புடைய மென்பொருள் தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்படியிருக்கும் நிலையில் பெங்களூரின் முக்கியமான ஒரு நிறுவனமாக விளங்கும் SAP அலுவலகம் H1N1 வைரஸ் தாக்குதலால் முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்திய வர்த்தகம் முடக்கம்
SAP நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தில் 2 ஊழியர்களுக்கு H1N1 வைரஸ் தாக்கியுள்ளதால் மொத்த பெங்களூரு அலுவலகம் மூடப்பட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் கூர்கான் மற்றும் மும்பை அலுவலகமும் காலவரையற்ற காலத்திற்கு மூடப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து ஊழியர்களுக்கும் ஈமெயில் மூலம் வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளது.
மென்பொருள் துறை
ஏற்கனவே கொரோனா வைரஸ் இந்திய வர்த்தகத்தையும், உற்பத்தியும் பெரிய அளவில் பாதித்துள்ள நிலையில் தற்போது H1N1 வைரஸ் தாக்குதல் மென்பொருள் துறையைப் பாதிக்குமா என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த நிகழ்வின் மூலம் பெங்களூரில் இருக்கும் அனைத்து மென்பொருள் மற்றும் மக்களுக்கும் எச்சரிக்கையாகவே இந்த நிகழ்வு உள்ளது.
H1N1 வைரஸ்
உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்கள் படி H1N1 வைரஸ்-ல் பாதிப்பை அடைந்தால் காய்ச்சல், வறண்டுபோன தொண்டை, நிமோநியா, உடல் சோர்வு, உடல் வலி ஆகியவை வரும் என அறிவித்துள்ளது.
எனவே இதுபோன்ற பாதிப்பு ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.