சமீப காலமாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை காரணம் காட்டி IT நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் இருக்குமா? இருக்காதா? என்ற விவாதங்களும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. AI தொழில்நுட்பம் கிடு கிடுவென வளர்ந்தாலும்.. அதனால் ஊழியர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்திய நாதெல்லா ஒரு சில கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
பிரபல தொழில்நுட்ப ஆய்வாளரான பென் தாம்சனுடன் சத்திய நாதெல்லா அளித்த பேட்டியில், IT நிறுவனங்கள் வேலை இழப்புக்கு AI தொழில்நுட்பத்தையே காரணம் காட்டி வருகின்றன. இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் மக்களிடம் AI தொழில்நுட்பத்திற்கு ஆதரவு கிடைக்காது.
எனவே பெரு நிறுவனங்கள் இதை சொல்வதற்கு பதிலாக AI வந்தாலும் புது புது வேலை வாய்ப்புகள் உருவாகும், இதனால் பணிபுரிபவர்களுக்கு செய்யும் வேலை இன்னும் சுலபமாகும் என்று சொல்லலாம். இப்படி செய்தால் மக்களும் தங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று நம்புவார்கள். இதற்கு மாறாக உங்கள் வேலையை AI பறித்து விடும் என்று மக்களை பயமுறுத்திக் கொண்டே இருந்தால் IT நிறுவங்கள் வெற்றி அடைய முடியாது.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்க கண்டிப்பாக டேட்டா சென்டர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் தேவை. இதை செய்வதற்கு மக்களின் ஆதரவும் முக்கியம். மேலும் டேட்டா சென்டர்களை உருவாக்குவதற்கு அதிக எலக்ட்ரிசிட்டி, லேண்ட் மற்றும் எந்த ஊரில் டேட்டா சென்டர் அமைக்கப்படுகிறதோ அந்த ஊரில் இருந்து நீர் மற்றும் ஆற்றல் தேவை.
இது போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக பயன்படுத்திக் கொண்டு உள்ளூர் மக்களுக்கே பயனில்லாமல் இருக்கக் கூடாது. டேட்டா சென்டர்கள் வந்தால் தங்களுடைய வேலைவாய்ப்பு பறிபோகும் என்று மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டால் அதற்கு எதிர்ப்பும் அதிகரிக்கும்.
கோடிங் எழுதுவது, ஆட்டோமேஷன் முறையில் பணிகளை எல்லாம் செய்வது போன்றவற்றுக்காகவே IT நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை விளம்பரப்படுத்தி வருகின்றன. புது தொழில்நுட்பத்தால் பணிச்சுமை குறைந்திருப்பதை இது வெளிக்காட்டினாலும் AI வந்துவிட்டால் மனிதர்களுக்கு வேலை பறிபோய்விடும் என்ற பயத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது. எனவே ஐடி நிறுவனங்கள் தங்கள் சாதனைக்காக ஏஐ பயன்படுத்தி பேசுவது பிறருக்கு சுயநலமாக தோன்றும் என்று சத்திய நாதெல்லா கூறியுள்ளார்.
சத்திய நாதெல்லா AI தொடர்பாக இதுபோன்ற கருத்துக்களை முன்வைத்தாலும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் அதிக அளவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஒன்று. நாம் தற்போது வரை பயன்படுத்த கூடிய விண்டோஸ், மைக்ரோசாப்ட் 365, கிட்ஹப் போன்ற அனைத்து சாப்ட்வேரிலும் கோபைலட் என்ற ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் உதவியாளரை மைக்ரோசாப்ட் பயன்படுத்தி வருகிறது.
அதோடு இந்த AI மாடல்களை சரிவர இயக்க பிரம்மாண்டமான கிளவுட் கம்ப்யூட்டிங் வசதியையும் அதிக பணம் செலவழித்து செய்து வருகிறது. இப்படி AI-ஐ பயன்படுத்தி லாபம் அடையும் நிறுவனத்தின் தலைவரே "AI-ஐ வைத்து விளம்பரம் செய்யாதீர்கள்" என்று கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications
