கச்சா எண்ணெய் சந்தை எப்போதும் பணம் கொட்டும் துறையாக இருந்தாலும் ஒவ்வொரு துறைக்கும் இருக்கும் இதே போட்டி, பிரச்சனைகள் அதிகமாகவே இந்தத் துறையில் உள்ளது.
சொல்லப்போனால் ஒரு நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், உற்பத்தி, வேலைவாய்ப்பு, உணவு ஆகிய அனைத்திற்கும் எரிபொருள் முக்கியக் காரணமாக இருப்பதால் எப்போது கச்சா எண்ணெய் சந்தை மிகவும் ஹாட்டான வர்த்தகச் சந்தையாகவே உள்ளது.
இப்படியிருக்கையில் ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது யாராலும் மறக்க முடியாது, இந்த நிலையில் இந்தியாவுக்கு விற்பனை செய்யும் நாடுகள் பட்டியலில் சமீபத்தில் முக்கிய இடத்தைப் பிடித்த ரஷ்யா தற்போது பின் தங்கியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு கச்சா எண்ணெய்-ஐ தள்ளுபடிக்குக் கொடுக்கத் துவங்கியது ரஷ்யா. இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியில் உலகில் 3வது பெரிய நாடாக இருக்கும் காரணத்தால் ரஷ்யாவின் தள்ளுபடியை அதிகளவில் பயன்படுத்தி வந்தது இந்தியா.
இந்தியா
இதனால் கடந்த 3 மாதமாக இந்தியாவுக்கு அதிகம் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. தற்போது ரஷ்யா, இந்தியாவுக்கான தனது கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்த நிலையில் சவுதி அரேபியா மீண்டும் விட்ட இடத்தைப் பிடித்துள்ளது,
சவுதி அரேபியா
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளர் மற்றும் நுகர்வோர் நாடாக விளங்கும் இந்தியா, சவுதி அரேபியாவில் இருந்து ஒரு நாளைக்கு 863,950 பீப்பாய்கள் (bpd) கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய மாதத்தை விட 4.8% அதிகரித்து உள்ளது.
ரஷ்யா
ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் 2.4% சரிந்து 855,950 bpd ஆக இருந்தது. இதனால் 2வது இடத்தை ரஷ்யா இழந்து சவுதி பிடித்துள்ளது, வழக்கம் போல் ஈராக் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
OPEC நாடுகள்
இந்த 3 மாதத்தில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிகக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த காரணத்தால் OPEC நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அளவு 59.8 சதவீதம் குறைந்து 16 வருட சரிவை எட்டியது. இது மட்டும் அல்லாமல் ஆப்பிரிக்கா இறக்குமதியையும் குறைந்தது.