நாட்டில் இன்று மிகப் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயங்களில், கச்சா எண்ணெய் விலையும் ஒன்று. ஏனெனில் தற்போது மீண்டும் எரிபொருட்கள் விலையானது அனுதினமும் மாற்றம் காணத் தொடங்கியுள்ளது.
குறப்பாக இது அதிக அளவில் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் சர்வதேச நாடுகளின் எண்ணெய் ஜாம்பவானான சவுதி அரேபியா அதன் முக்கிய வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் விலையை குறைத்துள்ளது. இது இறக்குமதி நாடுகளில் எரிபொருள் குறைய வழிவகுக்கலாம் என்ற நிலையில், சவுதியின் இந்த அறிவிப்பு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
ஆறுதல் தரும் விஷயம்
இது எண்ணெய் இறக்குமதி நாடுகளை சற்றே பாதுகாப்பாக உணர வைத்துள்ளது. இது ஓபெக் நாடுகள் கச்சா எண்ணெய் சப்ளையை படிப்படியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், சவுதி அரேபியாவின் சவுதி அராம்கோ எண்ணெய் விலையை சற்று குறைத்துள்ளது என்பது, மேலும் ஆறுதல் தரும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
யார் யாருக்கு?
சவுதி அரேபியாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ, அதன் முக்கிய வாடிக்கையாளர்களான ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளை சேர்ந்த முக்கிய வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை குறைப்பினை செய்துள்ளது. இது சர்வதேச அளவில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் தேவையானது அதிகரித்து வரும் நிலையில் விலையை குறைத்துள்ளது, ஆறுதல் கொடுக்கக்கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
தேவை அதிகரிக்கலாம்
குறிப்பாக மின்சாரத்துறையில் கடும் மின்வெட்டு நிலவி வரும் நிலையில், இது எண்ணெய் பொருட்களின் தேவையும் இன்னும் கூடுதலாக அதிகரிக்கலாம் என்ற நிலையே நிலவி வருகிறது. இதற்கிடையில் விலை இன்னும் எந்த அளவுக்கு செல்லுமோ என்ற அச்சமும். சர்வதேச சந்தையில் நிலவி வந்தது. இது இறக்குமதி நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் நிலவி வந்தது.
சப்ளையை அதிகரிக்க திட்டமிடும் ஓபெக்
இதற்கிடையில் தான் சவுதி அரேபியா இப்படி ஒரு அதிரடியான முடிவினை எடுத்துள்ளது. இது அதன் இறக்குமதி நாடுகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாகவே வந்துள்ளது. அதே நேரம் ஒபெக் நாடுகள், நவம்பரில் இருந்து ஒரு நாளைக்கு 4 லட்சம் பேரல்கள் சப்ளையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன
WTI கச்சா எண்ணெய் விலை
கடந்த திங்கட்கிழமை அன்று சவுதி அரேபியா மற்றும் ரஷ்ய தலைமையிலான ஓபெக் நாடுகள், நவம்பர் மாதத்திலிருந்து தினசரி உற்பத்தியை திட்டமிட்டுள்ள நிலையில், சில வர்த்தகர்களும் ஆய்வாளர்களும் எதிர்பார்த்ததை விட இது குறைவு என்று கருதுகின்றனர். இதனையடுத்து அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலையானது, ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு பேரலுக்கு 80 டாலர்கள் என்ற உச்சத்தை தொட்டுள்ளது.
எண்ணெய் விலை குறைப்பு
இந்த நிலையில்தான் சவுதி அரம்கோ கச்சா எண்ணெய் விலை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது லைட் கிரேடு ஆயிலை ஆசிய வாடிக்கையாளர்களுக்கு, நவம்பரில் பேரலுக்கு 40 செண்டுகள் குறைத்துள்ளது. இது மட்டும் அல்ல உலகின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையரான இது, மத்திய தரைக்கடல் மற்றும் வடமேற்கு ஐரோப்பா பகுதிகளுக்கு செல்லும், அனைத்து விதமான எண்ணெய் விலைகளையும் குறைத்துள்ளது.
நவம்பருக்கு மேல் விலை குறையலாம்
சர்வதேச அளவில் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையராக இருந்து வரும் சவுதி அரம்கோவின் இந்த அதிரடி முடிவால் வரவிருக்கும், நவம்பர் மாதத்திற்கு மேல் கச்சா எண்ணெய் விலை சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விலை குறைப்பில், அமெரிக்காவிற்கு செல்லும் பெரும்பாலான ஏற்றுமதி எண்ணெய்களுக்கு விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா உள்பட பல நாடுகள் பயன்
எனினும் சவுதி அராம்கோவின் இந்த விலை குறைவானது சிறிய அளவே என்றும், இது எதிர்பார்த்த அளவு இல்லை என்றும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சவுதி அரேபியா அதன் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 60% மேலாக ஆசியா மற்றும் சீனா, தென் கொரியா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளுக்கு செய்து வருகின்றது. ஆக இந்த விலை குறைப்பின் பலன் இதில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்வெட்டால் அதிகரிக்கும் தேவை
பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில்,தற்போது தான் வணிகமும் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டுள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. எனினும் இந்த சமயத்தில் சில நாடுகளில் மின்சாரப் பற்றாக்குறையினால், எரிபொருளுக்கான தேவையானது இன்னும் கூடுதலாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கொரோனா கால உற்பத்தி
குறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிரென்ட் கச்சா எண்ணையின் விலையானது 6% அதிகரித்துள்ளது. தற்போது பல நாடுகளின் பொருளாதாரமும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையிலும், ஓபெக் நாடுகள் இதுவரையில் சப்ளையை அதிகரிக்கவில்லை. 23 நாடுகள் அடங்கிய ஒபெக் அமைப்பு, கொரோனா காலத்தில் உற்பத்தியினை குறைத்து, ஒரு நாளைக்கு சுமார் 10 மில்லியன் பேரல்கள் செய்து வந்தன. இந்த நிலையே தற்போது வரையிலும் தொடர்ந்து வருகின்றது.
தேவையை ஊக்குவிக்கும் மின்சார பற்றாக்குறை
மின்சார பற்றாக்குறை காரணமாக பல்வேறு உற்பத்தியாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் எண்ணெய் மற்றும் கேஸ் பயன்பாட்டிற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இது இன்னும் தேவையை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது. இது விலையை இன்னும் ஊக்குவிக்கலாம் என்ற நிலையில் தான், சவுதி அராம்கோ இப்படி ஒரு முடிவினை எடுத்து இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.