சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட எண்ணெய் ஜாம்பவான்கள், அமெரிக்காவின் அழுத்தத்தினால் எண்ணெய் உற்பத்தியினை அதிகரிப்பார்களா? எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கப்படுமா? விலை குறையுமா? ஓபெக் நாடுகளின் இந்த முடிவானது சாதகமாக இருக்குமா? வாருங்கள் பார்க்கலாம்.
கடந்த ஆண்டில் கொரோனா பரவலின் காரணமாக பல்வேறு நாடுகளில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக கச்சா எண்ணெய் தேவையானது மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக விலையானது கடும் சரிவினையும் கடந்த ஆண்டில் கண்டது.
கச்சா எண்ணெய் தேவை
இதற்கிடையில் தற்போது கொரோனாவின் தாக்கமானது பல நாடுகளிலும் குறையத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில் மிகப்பெரிய இறக்குமதியளரான இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வருகின்றது. இதனால் கச்சா எண்ணெய் தேவையும் மீண்டு வந்து கொண்டுள்ளது. ஆனால் கொரோனா காலத்தில் குறைக்கப்பட்ட உற்பத்தியானது இன்னும், அப்படியே தொடர்ந்து கொண்டுள்ளது.
உற்பத்தி குறைக்கப்படுமா?
இதற்கிடையில் தற்போது அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட ஒபெக் நாடுகள் உற்பத்தியினை அதிகரிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் தற்போது பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
எரிபொருள் Vs பணவீக்கம்
அமெரிக்காவில் தற்போது ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலையானது அதிகரித்துள்ளது. இது பணவீக்கத்தினை தூண்டுகிறது. இதற்கிடையில் தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கச்சா எண்ணெய் உற்பத்தியினை அதிகரிக்க, 23 நாடுகளை கூட்டணிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
எண்ணெய் தினசரி உற்பத்தி
சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா தலைமையிலான ஒபெக் நாடுகள், தற்போது தினசரி உற்பத்தியை மாதத்திற்கு 4,00,000 பேரல்கள் அதிகரித்துள்ளது. இது போதுமான இருக்கும். அடுத்த ஆண்டில் எண்ணெய் சப்ளையானது பற்றாக்குறையிலிருந்து உபரிக்கு மாறும் என்றும் அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்தின் உயர் அதிகாரி மஸ்ரூயி கூறியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கலாம்
வரவிருக்கும் டிசம்பர் 2 அன்று ஓபெக் கூட்டணி நடக்கவிருக்கும் நிலையில், தற்போது கச்சா எண்ணெய் விலை ஆண்டு சுமார் 60% அதிகரித்து, பேரலுக்கு 80 டாலர்களுக்கும் அதிகமாக உள்ளது. இது வரும் மாதங்களில் 100 டாலர்களையும் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி அதிகரிக்கப்படுமா?
இந்த நிலையில் அமெரிக்காவின் கோரிக்கைக்கு ஏற்ப ஓபெக் நாடுகள் உற்பத்தியை அதிகரித்தால், அது அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல, இந்தியாவுக்கும் நல்ல விஷயமாகத் தான் இருக்கும். ஆனால் அப்படி ஒரு முடிவினை ஓபெக் நாடுகள் எடுக்குமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.