இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையனஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது வர்த்தகம் மற்றும் வருமானத்திற்காக டெலிகாம், ரீடைல், டிஜிட்டல் சேவைகள் எனப் பல துறைகளில் இறங்கியிருந்தாலும் இக்குழுமத்தின் 70 சதவீத வருமானம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் அதைச் சார்ந்த வர்த்தகத்தில் இருந்து தான் வருகிறது.
இந்நிலையில் இப்பிரிவு வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனத் திட்டமிட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, இப்பிரிவு வர்த்தகத்தை உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான சவுதி அரேபியாவின் அராம்கோ-விற்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஒப்பந்தம் பல்வேறு காரணங்களுக்காகக் கடந்த 2 வருடமாகத் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் தற்போது சூழ்நிலை அனைத்தும் சாதகமாக மாறியுள்ள நிலையில் விரைவில் இந்த ஒப்பந்தம் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி ஆராம்கோ நிதி நிலை
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சவுதி ஆராம்கோ நிறுவனத்தின் நிதிநிலை கணிப்புகளை விடவும் சிறப்பாக உள்ளது. இதனால் சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு உள்ள ரிலையன்ஸ் O2C நிறுவனம் மற்றும் சவுதி அராம்கோ நிறுவனத்திற்கு இடையிலான பங்கு விற்பனை விரைவில் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை
உலக நாடுகளின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் உற்பத்தி குறைப்பு, சவுதி ஏற்றுமதி தளத்தின் மீது தாக்குதல் எனப் பல்வேறு காரணங்களால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 70 டாலரைத் தொட்டு உள்ளது. நவம்பர் மாதம் இதன் விலை வெறும் 38 டாலர்.
100 பில்லியன் டாலர் கையிருப்பு
இந்த அதிகப்படியான விலையின் மூலம் 2022க்குள் சவுதி ஆராம்கோ நிறுவனத்திடம் குறைந்தபட்சம் 100 பில்லியன் டாலர் அளவிலான நிதி கையிருப்பில் இருக்கும் எனப் பாங்க ஆப் அமெரிக்கா தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
20 சதவீத பங்குகள் விற்பனை
2019ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது கச்சா எண்ணெய் வர்த்தகத்தைச் சுமார் 75 பில்லியன் டாலருக்கு மதிப்பீடு செய்யப்பட்டு, தனது 20 சதவீத பங்குகளை ஆராம்கோ நிறுவனத்திற்கு 15 பில்லியன் டாலர் தொகைக்கு விற்பனை செய்ய இரு நிறுவனங்களும் முடிவு செய்தது.
சவுதி அரேபியா
ஆனால் சவுதியின் நிதி நிலைமை, கொரோனா தொற்று , நிதி நெருக்கடி, மந்தமான கச்சா எண்ணெய் விற்பனை ஆகியவற்றின் காரணமாக ஆராம்கோ தனது 15 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்தை ஒத்திவைத்தது. இந்நிலையில் தற்போது விரைவில் இந்த ஒப்பந்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.