ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களே! இந்த மே மாத இறுதியில் சுமார் 6 நாட்கள் SBI கிளைகள் மூடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் வேலை நிறுத்தம், வார விடுமுறை நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை அனைத்தும் ஒன்று சேர வருகிறது. இதனால் தொடர்ந்து 6 நாட்கள் வங்கி சேவை பெறுவதில் தாமதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே கடைசி நேர திண்டாட்டத்தை தவிர்க்க, வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தங்களுடைய வங்கி சேவைகளை முடித்துக் கொள்வது நல்லது.
அகில இந்திய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஊழியர்கள் கூட்டமைப்பு (AISBISBISF) சார்பில் 2026-ஆம் ஆண்டின் மே 25 மற்றும் மே 26 ஆகிய 2 தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மே 23-ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை. மே 24 ஞாயிற்றுக்கிழமை. இதுவும் வாராந்திர விடுமுறையாகிவிடுகிறது.
மே 25 திங்கள் மற்றும் மே 26 செவ்வாய் ஆகிய 2 தேதிகளில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அதன் பிறகு மே 27 புதன், மே 28 வியாழன் ஆகிய 2 நாட்களிலும் பக்ரீத் பண்டிகைக்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை சில மாநிலங்களில் மாறுபடும். இப்படி அனைத்தும் சேர்ந்து வருவதால் பல மாநிலங்களில் தொடர்ந்து 6 நாட்கள் வங்கி கிளைகள் செயல்படாது.

ஏன் இந்த போராட்டம்?: எஸ்பிஐ ஊழியர்கள் 16 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். சில வருடங்களாக சப்போர்ட் ஸ்டாப் நியமனம் செய்யப்படாமல் இருக்கிறது. இதை SBI பேங்க் முழுமையாக நிறுத்தியுள்ளது. இதனால் ஏற்கனவே வங்கியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கிறது.
மேலும் வங்கியில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் இல்லாமல் இருப்பதால் வங்கி பாதுகாப்பிலும் பிரச்சனை ஏற்படுகிறது. அதேபோல தேசிய ஓய்வூதிய திட்டத்திலும் சில மாற்றங்களை கொண்டு வர வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற வங்கி ஊழியர்களுக்கு இருப்பது போல பண்டு மேனேஜரை மாற்றும் வசதி எஸ்பிஐ ஊழியர்களுக்கு இல்லை என்று கவலை தெரிவித்துள்ளனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இரண்டு நாட்கள் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தனை நாட்கள் வங்கி இயங்கவில்லை என்றால் செக் டிரான்ஸ்பர் மற்றும் பணம் டெபாசிட் செய்வதில் பிரச்சனை ஏற்படும். எனவே வாடிக்கையாளர்கள் அனைத்து பேப்பர் வேலைகளையும் முன்கூட்டியே செய்து முடிப்பது நல்லது. வங்கி கிளைகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தலாம். நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் ஆப், ஏடிஎம் போன்றவை வழக்கம் போல செயல்படும். இருந்தாலும் 6 நாட்கள் தொடர் விடுமுறையாக இருப்பதால் ஏடிஎம்களில் பணம் தீர்ந்து போகும் வாய்ப்புள்ளது. அதற்கு புத்திசாலித்தனமாக திட்டமிட்டு முன்கூட்டியே பணம் எடுத்துக் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications