வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடுகளை அதிகரிப்பதற்காக வங்கிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கிகளாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா இணைந்து FCNR(B) டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.
இதன் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் முதலீடுகளுக்கு 6 சதவீதம் வரை கூடுதல் வட்டி பெற முடியும். இதற்கு முன்னர் டாலரில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு 3.35 சதவீதம் மட்டுமே வட்டி வழங்கப்பட்டது. ஆனால் இந்த விகிதத்தை SBI பேங்க் 6 சதவீதமாக உயர்த்தியதின் காரணமாக 265 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் HDFC பேங்க், எஸ் பேங்க் மற்றும் ஏயூ ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ஆகியவை தங்கள் FCNR டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது. இந்நிலையில் மறுநாளே எஸ்பிஐ மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகியவையும் வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா "FCNR(B) அட்வான்டேஜ் டெபாசிட்" என்ற திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 1 மில்லியன் அமெரிக்க டாலர் வரையில் டெபாசிட் செய்ய முடியும். 3 முதல் 4 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுக்கு 5.25 சதவீதமும், 4 முதல் 5 ஆண்டுகளுக்கும் குறைவான டெபாசிட்டுக்கு 5.50 சதவீதமும், 5 ஆண்டுகளுக்கான டெபாசிட்டுக்கு 5.75 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான டெபாசிட் செய்பவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு 6 சதவீதம் வரை வட்டி கிடைக்கும்.

பேங்க் ஆஃப் பரோடா, அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங், யூரோ, ஆஸ்திரேலிய டாலர் மற்றும் கனடியன் டாலர் உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு கரன்சிகளில் முதலீடு செய்பவர்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.
இனி வெளிநாடு வாழ் இந்தியர்கள் டாலரில் டெபாசிட் செய்தால் 6 சதவீத வட்டியைப் பெற முடியும். பிரிட்டிஷ் பவுண்ட் மற்றும் ஆஸ்திரேலியா டாலர் டெபாசிட்களுக்கு 4.7% வரையிலும் கனேடிய டாலர் டெபாசிட் 5.15 சதவீதம் வரையிலும், யூரோ டெபாசிட்டுக்கு 3.75 சதவீதம் வரையிலும் வருமானம் பெற முடியும்.
இது குறித்து பேசிய பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் நிர்வாக இயக்குனர் பீனா வகித், ரிசர்வ் வங்கி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, இதனால் வங்கிகளுக்கும் சாதகமான சூழலே உருவாகியுள்ளது, இந்திய ரூபாயின் மதிப்பை அதிகரிப்பதற்காகவும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு ஏதுவாக பேங்க் ஆஃப் பரோடாவின் இந்த புதிய திட்டங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கண்டிப்பாக வருமானம் ஈட்ட சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications