பாரத ஸ்டேட் வங்கி இனி 24 மணி நேரமும் தனது வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதாக அறிவித்துள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு விஷயத்துக்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வங்கிக்கு செல்லாமலேயே ஆன்லைன் மூலம் மற்றும் தொலைபேசி மூலம் பல வங்கிப் பணிகளை முடித்துக் கொள்ளும் நிலை தற்காலத்தில் ஏற்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி
இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இரண்டு புதிய இலவச கட்டணமில்லா எண்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த தொலைபேசி எண்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிப்பணிகளை அழுத்தம் இல்லாமல் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் தங்களது வங்கி சேவையை பெற உதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேர சேவை
வங்கி வாடிக்கையாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக வங்கி கிளைகளுக்கு நேரடியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இனி அதற்கு அவசியம் இனி இல்லை என்றும் இந்த எண்களைத் தொடர்புகொண்டால் 24 மணி நேரமும் வங்கி சேவையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
தொடர்பு மைய எண்கள்
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி வங்கி தொடர்பான வேலைகளுக்கு, நேரடியாக சென்று செய்யும் பணிகளுக்கு குட்பை சொல்லுங்கள் என்றும் எஸ்பிஐ தொடர்பு மையங்களான 1800 1234 அல்லது 1800 2100 ஆகிய இரண்டு எண்களுக்கு இலவசமாக அழைத்து உங்களது சேவையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
என்னென்ன சேவைகள்
எஸ்பிஐ வங்கியின் இந்த புதிய வசதி மூலம் கட்டணமில்லா எண்களை பயன்படுத்தி என்னென்ன சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம். முதல்கட்டமாக வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள இருப்பு தொகை மற்றும் கடைசி ஐந்து பரிவர்த்தனைகளை கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
ஏடிஎம் சேவைகள்
அதேபோல் ஏடிஎம் கார்டு சம்பந்தப்பட்ட எந்த சேவையாக இருந்தாலும் மேற்கண்ட தொலைபேசி எண்களை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம். காசோலை புத்தகம் தேவைப்படுபவர்கள் இந்த எண்களை தொடர்பு கொண்டால் அடுத்த இரண்டு நாட்களில் காசோலை புத்தகம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
டிடிஎஸ் விவரங்கள்
மேலும் மின்னஞ்சல் மூலம் டிடிஎஸ் விவரங்கள் மற்றும் டெபாசிட் வட்டி சான்றிதழ் ஆகியவற்றை அனுப்ப கோரிக்கை விடுத்தால் அவர்களுக்கு அந்த சேவையை உடனடியாக செய்து முடிக்கப்படும்.
ஏடிஎம் கார்டை பிளாக் செய்ய
மோசடி நடைபெறும்போது ஏடிஎம் கார்டை பிளாக் செய்யவும், பிளாக் செய்யப்பட்ட எடிஎம் கார்டுக்கு பதிலாக புதிய கார்டுக்கு கோரிக்கை விடுக்கவும் மேற்கண்ட எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ வங்கியின் இந்த புதிய கட்டணமில்லா சேவைக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
மோசடி எண்கள்
இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தியையும் அளித்துள்ளது. +91-8294710946 அல்லது +91-7362951973 ஆகிய எண்களில் இருந்து அழைப்பு வந்தால் அந்த அழைப்பை ஏற்க வேண்டாம் என்றும் இவை மோசடியான அழைப்புகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஃபிஷிங் இணைப்புகள்
இந்த எண்களில் இருந்து பேசும் மோசடி நபர்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு KYC புதுப்பிக்க வேண்டுமென ஃபிஷிங் இணைப்புகளை அனுப்பும் என்றும் அந்த இணைப்புகளை நீங்கள் கிளிக் செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எனவே இத்தகைய சந்தேகத்துக்குரிய இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.