மும்பை: கொரோனாவால் பொருளாதாரம் கடந்த முதல் காலாண்டிலேயே 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டது. இதன் தாக்கம் வங்கிகளிலும் காணப்படுகிறது எனலாம்.
ஏனெனில் மக்களின் கடனை திரும்ப செலுத்தும் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. அதிலும் இஎம்ஐ கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த விகிதம் இன்னும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் எஸ்பிஐ கார்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்பிஐ கார்டின் வாராக்கடன் செப்டம்பர் 30-வுடன் முடிவடைந்த காலாண்டில் 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
இஎம்ஐ கால அவகாசம்
கொரோனா காரணமாக நாடு முழுக்க கடந்த மார்ச் இறுதியிலிருந்து ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஆரம்ப கட்டங்களில் ஊரடங்கு மிக கடுமையாக இருந்தது. எனவே தொழில் நிறுவனங்கள் இயங்கவில்லை. மக்கள் கையில் பணப்புழக்கம் இல்லை. எனவே, 6 மாத காலம் இஎம்ஐ செலுத்த கால அவகாசம் வழங்கியது ரிசர்வ் வங்கி.
வாராக்கடன் இல்லை
ஆனால் வங்கிகளோ வட்டிக்கு வட்டி கட்ட வேண்டும் என வாதிட்டன. ஆனால் இதனை எதிர்த்து வட்டிக்கு வட்டி கட்ட முடியாது என வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் 6 மாத கால இஎம்ஐ சலுகைக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும், ஆனால் இது 2 கோடி ரூபாய்க்கு மேலான கடனுக்கு இது பொருந்தும் என்றும் கூறியது. அதோடு இந்தக் கடன்களை வாரக்கடன் பட்டியலில் கொண்டு வரக்கூடாது என்றும் கூறியது.
வாரக்கடன் அதிகரித்திருக்கலாம்
இதன் காரணமாக எஸ்பிஐ கார்டின் வாரக்கடனும் சற்று குறைந்துள்ளது எனலாம். ஒரு வேளை உச்சநீதிமன்றம் அப்படி அறிவிக்காமல் இருந்திருந்தால், இந்த வாராக்கடன் விகிதமானது 7.5% ஆக அதிகரித்து இருக்கலாம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் 84% அதிகமான எஸ்பிஐ கார்டின் வாடிக்கையாளார்கள் சம்பளதாரர்கள் என்று தெரிவித்துள்ளது. 38% வாடிக்கையாளர்கள் பொதுத்துறையிலும், இதே 24% பேர் மிகப்பெரிய கார்ப்பரேட்டுகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
லாபத்தில் வீழ்ச்சி
எஸ்பிஐ கார்டு கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 46% லாபத்தில் வீழ்ச்சி கண்டு, 206 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. கிரெடிட் கார்டு நிறுவனமான இது கடந்த ஆண்டில் 381 கோடி ரூபாயாக லாபம் கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
எப்படி இருப்பினும் கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் வருவாய் 6 சதவீதம் அதிகரித்து 2,513 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 2,376 கோடி ரூபாயாக கண்டிருந்தது. இந்த நிலையில் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வந்த பின்னர், இந்த பங்கின் விலை 7 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
செலவினமும் குறைவு
இந்த நிறுவனம் நாட்டின் முன்னணி கடன் வழங்குனரும், பொதுத்துறை வங்கியுமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் துணை நிறுவனமாகும். இது இரண்டாவது காலாண்டில் புதிய கார்டு வளர்ச்சி 16 சதவீதம் அதிகரித்து 1.10 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 0.95 கோடி ரூபாயாக இருந்தது. எனினும் கார்டின் மூலம் வாடிக்கையாளர்கள் 29,590 கோடி ரூபாயினை செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 33,176 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வடி வருமானம் அதிகரிப்பு
இதன் வட்டி வருமானம் 9.7 சதவீதம் அதிகரித்து 1,275 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 1,162 கோடி ரூபாயாக இருந்ததாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில்லறை செலவினங்களுக்காக செலவழித்த தொகை 50% அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இது கொரோனாவிற்கு முன்பு 90 சதவீதம் இருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இந்த பங்கின் விலையானது இந்த அறிக்கை வெளியான நிலையில், பிஎஸ்இ-யில் 829.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது.