இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான கார்லைல் குரூப் கட்டுப்பாட்டில் இந்தியாவில் இயங்கி வரும் எஸ்பிஐ கார்ட்ஸ் மற்றும் பேமெண்ட் சர்வீசஸ் லிமிடெட்ட நிறுவனம் வருகிற மார்ச் மாதம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இந்திய முதலீட்டாளர்களுக்குச் சரியான முதலீட்டுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
கிரெடிட் கார்டு நிறுவனம்
பலருக்கும் தெரியாத எஸ்பிஐ கார்ட்ஸ் மற்றும் பேமெண்ட் சர்வீசஸ் லிமிடெட்ட நிறுவனம் ஒரு கிரெடிட் கார்டு நிறுவனம். இந்தியாவில் 1998ஆம் ஆண்டு GE கேப்பிடல் கார்ப் நிறுவனத்துடன் இணைந்து துவங்கியது.
2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் GE கேப்பிடல் கார்ப் சுமார் 40 சதவீத பங்குகளை எஸ்பிஐ மற்றும் கார்லைல் நிறுவனத்திற்கு விற்பனை செய்து வெளியேறியது. தற்போது எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனம் பல்வேறு கிரெடிட் கார்டுகளையும், லைப்ஸ்டைல் கார்டு, ரிவார்டு கார்டு, டிராவல் கார்டு, பெர்டோல் கார்டு, ஷாப்பிங் கார்டு, பேங்கி பார்ட்னர்ஷிப் கார்டு, கார்பரேட் கார்டு எனப் பலதரப்பட்ட கார்டுகளை மக்களுக்கு வழங்குகிறது.
செபி ஒப்புதல்
எஸ்பிஐ கார்ட்ஸ் மற்றும் பேமெண்ட் சர்வீசஸ் லிமிடெட்ட நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி கடந்த வாரம் ஒப்புதல் கொடுத்த நிலையில், பிப்ரவரி மாத இறுதியில் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான பணிகளைத் துவங்க உள்ளது. இதன் பின் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் எனத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
9000 கோடி ரூபாய்
தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி ஸ்பிஐ கார்ட்ஸ் மற்றும் பேமெண்ட் சர்வீசஸ் லிமிடெட்ட நிறுவனம் சுமாப் 9000 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டு உள்ளதால் முதலீட்டாளர்களுக்கு இந்நிறுவனம் மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பை உருவாக்கித் தரும் எனப் பல தரப்பினர் தெரிவித்துள்ளனர். யெஸ் பேங்க் போன்ற பல நிறுவனங்கள் முதலீட்டாளர்களை ஏமாற்றிய நிலையில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனம் லாபகரமானதாக இருக்கும் என முதலீட்டாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.
பங்கீடு
ஸ்பிஐ கார்ட்ஸ் மற்றும் பேமெண்ட் சர்வீசஸ் லிமிடெட்ட நிறுவனத்தில் எஸ்பிஐ சுமார் 74 சதவீத பங்குகளையும், கார்லைல் குரூப் நிறுவனம் தனது கிளை நிறுவனமான சிஏ ரோவர் ஹோல்டிங்க்ஸ் 26 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
இந்நிலையில் இக்கூட்டணி நிறுவனம் மார்ச் மாதத்தில் சுமார் 13 கோடி பங்குகளைப் பங்குச்சந்தையில் விற்பனை செய்ய உள்ளது. இதில் எஸ்பிஐ 4 சதவீத பங்குகளையும், கார்லைல் குரூப் 10 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.
எஸ்பிஐ கார்ட்ஸ்
இந்தியாவில் எஸ்பிஐ கார்ட்ஸ் 2வது பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமாகத் திகழ்கிறது, சுமார் 94.6 லட்ச கிரெடிட் கார்டுகளை விநியோகம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 18 சதவீத சந்தை வர்த்தகத்தை இந்நிறுவனம் வைத்துள்ளது.
இந்திய கிரெடிட் கார்டு சந்தையில் ஹெச்டிஎப்சி வங்கி 1.33 கோடி கிரெடிட் கார்டுகளையும், ஐசிஐசிஐ வங்கி 79 லட்ச கிரெடிட் கார்டுகளுக்குச் சேவை அளித்து வருகிறது.