அண்ணன் முகேஷ் அம்பானி, இந்தியாவில் எந்த வியாபாரத்தையும் விட்டு வைப்பதாகத் தெரியவில்லை.
கச்சா எண்ணெய் வியாபாரத்தில் இருந்து இன்று டெலிகாம் மற்றும் சில்லறை வணிகம் வரை எல்லா துறைகளிலும் வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்.
ஆனால் தம்பி அனில் அம்பானியோ, தன் வியாபாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளவே முடியாமல், வாங்கிய கடன்களை திருப்பி அடைக்க முடியாமல், கம்பெனி சொத்து பத்துக்களை எல்லாம் விற்றுக் கொண்டு இருக்கிறார்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
இப்போதும் கடன் விவகாரத்தில், அனில் அம்பானியை, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விடாமல் துரத்திக் கொண்டு இருக்கிறது. அது என்ன கடன் விவகாரம். ஏன் எஸ்பிஐ திடீரென தன் கடனை வசூலிக்க அவசரம் காட்டுகிறது? இதற்கு முன் என்ன செய்து இருக்கிறது? என்பதைத் தான் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
என்ன பிரச்சனை
சில மாதங்களுக்கு முன், மூன்று சீன வங்கிகள், அனில் அம்பானிக்கு கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க, இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். அந்த வழக்கின் தீர்ப்பில், சீன வங்கிகளுக்கு, அனில் அம்பானி 717 மில்லியன் டாலர் பணத்தை கொடுக்கச் சொன்னது. அந்த 717 மில்லியன் டாலரை வசூலிக்க, 3 வங்கிகளும் முயற்சித்துக் கொண்டு இருக்கின்றன. இதை எஸ்பிஐ பார்த்துக் கொண்டு தான் இருந்தது. இப்போது செயலில் இறங்கி இருக்கிறது.
முந்திக் கொள்ளும் எஸ்பிஐ
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும், அனில் அம்பானியின் பல நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் கடன் கொடுத்து இருக்கிறார்கள். சீன வங்கிகள், முந்திக் கொண்டு அனில் அம்பானியிடம் இருந்து சொத்து பத்துக்களை எல்லாம் வளைத்து கடனை வசூலிப்பதற்குள், எஸ்பிஐ, அனில் அம்பானியிடம் இருந்து கடன்களை வசூலிக்க விரும்புவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
என்ன செய்து இருக்கிறது எஸ்பிஐ
அனில் அம்பானியின் கம்பெனிகளுக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கொடுத்திருக்கும் கடன்களை, அனில் அம்பானி கொடுத்து இருக்கும் personal guarantee வழியாக வசூலித்துக் கொள்ள, தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தை (NCLT - Nationl Company Law Tribunal) நாடி இருக்கிறார்களாம். இந்த பர்சனல் கேரண்டியின் மதிப்பு சுமாராக 1200 - 1300 கோடி ரூபாய் இருக்கும் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அனில் அம்பானி தரப்பு
அனில் அம்பானி தரப்பில் இருந்து "இது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் & ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் போன்ற கம்பெனிகளின் கடன். அனில் அம்பானியின் சொந்தக் கடன் அல்ல. இந்த 2 கம்பெனிகளுக்குமான ரெசல்யூஷன் திட்டங்கள், கடன் கொடுத்தவர்களால் (வங்கிகளால்) மார்ச் 2020-லேயே அனுமதிக்கப்பட்டுவிட்டது. தற்போது என் சி எல் டி-யின் அனுமதிக்காக ரெசல்யூஷன் திட்டம் கிடப்பில் இருக்கிறது" எனச் சொல்கிறார்கள். இந்த ரெசல்யூஷன் திட்டத்திலும் எஸ்பிஐ இருக்கிறது.
பாராட்டுக்குரியது
"அதான் ரெசல்யூஷன் திட்டம் இருக்கிறதே, அதற்கான அனுமதி வரட்டும் கடனை வசூலித்துக் கொள்ளலாம்" என ஓயவில்லை எஸ்பிஐ. தன் கடனை வசூலிக்க, அனில் அம்பானியின் பர்சனல் கேரண்டியை கணக்கில் எடுத்துக் கொண்டு துரத்திக் கொண்டு இருக்கிறது. அந்த விஷயத்தில் எஸ்பிஐ வங்கியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
சொத்து ஏலம்
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் டெலிகாம் & ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் போன்ற கம்பெனிகளின் சொத்துக்கள் கடந்த ஜனவரி 2020-லேயே ஏலத்துக்கு வந்துவிட்டன. ஏலத்தில் அதிக தொகை கோரி இருப்பவர்களின் விவரங்களும் வெளியானது நினைவிருக்கலாம். எந்த கம்பெனிகளின் சொத்துக்களை யார் அதிக தொகைக்கு ஏலம் கோரி இருக்கிறார்கள் என்கிற விவரத்தையும் கீழே கொடுத்து இருக்கிறோம்.
ரிலையன்ஸ் டெலிகாம் & ஆர் காம்
UV Asset Reconstruction என்கிற கம்பெனி தான் ரிலையன்ஸ் டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் ரியல் எஸ்டேட் சொத்துக்கள், டேட்டா செண்டர் வியாபாரம் மற்றும் எண்டர்பிரைஸ் சொத்துக்கள் போன்றைகளுக்கு அதிகபட்சமாக 16,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் கோரியது.
அண்ணன் அம்பானி
முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் கம்பெனிக்கு அதிகபட்சமாக 3,609 கோடி ரூபாய்க்கு ஏலம் கோரினார். ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல்லுக்கு சொந்தமாக 22 டெலிகாம் சர்க்கிள்கள் இந்தியாவில் இருக்கின்றன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு சொந்தமாகை இந்தியாவில் சுமார் 43,000 டெலிகாம் டவர்கள், ஆப்டிக் ஃபைபர் லைன்கள் மற்றும் டேட்டா செண்டர்கள் இருக்கின்றனவாம்.