இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய டிஜிட்டல் பணப் பரிமாற்றத்திற்குத் தவறுதலாக வசூலித்த கட்டணத்தைத் திருப்பி வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல் உள்ளது குறித்துக் கேள்வி எழுந்த நிலையில், முறையான விளக்கத்தை அளித்துள்ளது.
அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு
எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கிற்கு (BSBD Account) எவ்விதமான பணப் பரிமாற்ற கட்டணமும் இல்லை. இதேபோல் யூபிஐ மற்றும் ருபே டெபிட் கார்டு மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றத்திற்கும் எவ்விதமான கட்டணமும் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 16 கோடி BSBD சேமிப்பு கணக்கு உள்ளது, இதில் 14 கோடி கணக்குகள் நிதி உள்ளடக்கத் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி சுமார் 164 கோடி ரூபாய் அளவிலான பரிமாற்ற கட்டணத்தை இன்னும் ஜன் தன் யோஜனா கணக்காளர்களுக்கு அளிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டிஜிட்டல் பணப் பரிமாற்றம்
இந்தக் கட்டணம் அனைத்து டிஜிட்டல் பணப் பரிமாற்றத்திற்காக ஜன் தன் யோஜனா கணக்குகளுக்கு ஏப்ரல் 2017 முதல் டிசம்பர் 2019 வரையில் வசூலிக்கப்பட்டது. மேலும் வசூலிக்கப்பட்ட 164 கோடி ரூபாய் தொகையில் 90 கோடி ரூபாய் ஏற்கனவே அரசின் உத்தரவின் பெயரில் திரும்பி அளிக்கப்பட்டு உள்ளது.
254 கோடி ரூபாய் கட்டணம்
இதன் மூலம் இக்குறிப்பிட்ட காலத்தில் 16 கோடி BSBD சேமிப்புக் கணக்குகளுக்கு யூபிஐ, ருபே டெபிட் கார்டு வாயிலாக ஒரு பரிமாற்றத்திற்கு 17.70 ரூபாய் வீதம் 254 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதில் 90 கோடி ரூபாய் மட்டுமே திருப்பி அளித்துள்ளது.
கட்டணங்கள் தள்ளுபடி
01.01.2020 முதல் வங்கிகள் அனைத்து டிஜிட்டல் பணப் பரிமாற்றத்திற்கான கட்டணத்தையும் தள்ளுபடி செய்தது. மேலும் BSBD கணக்குகளுக்கு எஸ்எம்எஸ் கட்டணம் மற்றும் மினிமம் பேலென்ஸ் அளவீடு ஆகியவற்றையும் தள்ளுபடி செய்தது. வங்கிகள் இந்த BSBD கணக்குகளுக்கு அளிக்கும் AePS, கார்டு + பின் ஏடிஎம் பணப் பரிமாற்றங்கள் போன்றவற்றிற்கு கட்டணத்தைச் செலுத்த வேண்டும், இதற்காகச் செலவிடப்படும் 12.72 ரூபாயை வங்கிகளே ஏற்கிறது.
ஏடிஎம் பணப் பரிமாற்றம்
இதேபோல் BSBD கணக்குகளுக்கு மாதம் 4 முறைக்கு மேல் ஏடிஎம் பயன்படுத்தும் போது கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் CBDT அமைப்பு தவறாக வசூலித்த பணப் பரிமாற்ற தொகையைத் திருப்பி அளிக்க உத்தரவிட்டு உள்ள போதிலும் எஸ்பிஐ இன்னும் வசூலித்த தொகையைத் திருப்பி அளிக்காமல் உள்ளது.