மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளில் வாடிக்கையாளர்களிடம் இருந்து 300 கோடி ரூபாய்க்கு மேல் எஸ்பிஐ வங்கி அபராதமாக வசூலித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, அரசுத் துறை வங்கி என்பதால் சேமிப்பு உள்ளிட்ட வங்கி கணக்குகளுக்கு எஸ்பிஐ வங்கியையே மக்களும் தேர்ந்தெடுக்கின்றன.
நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள எஸ்பிஐ, பல கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இதைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட எஸ்பிஐ, வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் 300 கோடி ரூபாய்க்கு மேல் கட்டணமாக வசூலித்துள்ளது.
ஜீரோ பேலன்ஸ் கணக்கில் கட்டணம்
ஜீரோ பேலன்ஸ் அல்லது அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு (BSBDA) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து இந்த கட்டண தொகையை எஸ்பிஐ வசூலித்திருக்கிறது. குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்காக அறிவிக்கப்பட்ட வங்கிக் கணக்கில், எஸ்பிஐ கட்டண தொகையை வசூலித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டணம் வசூலிக்கப்படாது?
எஸ்பிஐ-யின் இந்த சேமிப்பு கணக்கு தொடங்குவோருக்கு குறைந்தபட்ச வசதிகள் மட்டுமே அளிக்கப்படுவதுடன், மினிமம் பேலன்ஸ் இல்லையென்றாலும் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும் இந்த கணக்கை தொடங்க பணம் ஏதும் செலுத்த தேவையில்லை. அத்துடன் கணக்கில் பணம் இல்லாமல் போனாலும் அபராதம் கிடையாது என்ற விதிமுறைகள் உண்டு.
அபராதம் இல்லை
இரு வருடங்களுக்கு முன் இந்தக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம், எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அபராதம் விதிக்கப்படாது என்று 2013ம் ஆண்டின் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் கூறுகிறது.
மொத்த வசூல்
ஆர்பிஐ-ன் இந்த வழிகாட்டுதலை மீறியுள்ள எஸ்பிஐ வங்கி, இந்தக் கணக்கு வைத்திருப்பவர்களிடம் 2015ம் ஆண்டிலிருந்து மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் 17.70 ரூபாய் என்ற வீதம் கட்டணமாக வசூலிப்பில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் 2015ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டு வரை எஸ்பிஐ வங்கி, 300 கோடி ரூபாய்க்கு மேல் கட்டணமாக வசூலித்திருக்கிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதில், 2018-19ம் ஆண்டில் 72 கோடி ரூபாயும், 2019-20ஆம் ஆண்டில் 158 கோடி ரூபாயும் வசூலித்திருக்கிறது. இதே நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி 3.9 கோடி வாடிக்கையாளர்களிடமிருந்து, 9.9 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ரிசர்வ் வங்கியின் விதிகளை வெளிப்படையாகவே மீறியிருப்பதால், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மும்பை ஐஐடி வலியுறுத்தியுள்ளது.