நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின், ஆன்லைன் பரிவர்த்தனைகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சரிவர இயங்கவில்லை என அதன் வாடிக்கையாளர்கள் கூறி வருகின்றனர்.
அதோடு இவ்வங்கியின் மற்றொரு மிகப்பெரிய சேவையான யோனோ ஆப்பினையும் லாகின் செய்ய இயங்கவில்லை, அதுவும் ERROR வருவதாக அதன் வாடிக்கையாளர்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அதிலும் இது, மாதத்தின் தொடக்க நாட்களாக இருப்பதால் பலரும் தங்களது பரிவர்த்தனைகளை செய்ய முடியாமல் தவிப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர்,
யோனோ ஆப்பினை லாகின் செய்ய முடியவில்லை
இது குறித்து ஒரு வாடிக்கையாளர் சில மணி நேரங்களாகவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் யோனோ ஆப்பினை லாகின் செய்ய இயலவில்லை. அப்படி லாகின் செய்தால் M0005 என்ற ERROR வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் யோனோ ஆப்பில் எந்த பரிவர்த்தனையும் செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார்.
ஆன்லைனில் பணம் அனுப்ப முடியவில்லை
சில வாடிக்கையாளர்கள் யோனோ ஆப், ஒரு மோசமான பயன்பாடு. இதுவரையில் நாங்கள் இப்படி ஒரு பிரச்சனையை எதிர்கொண்டது இல்லை. நீங்கள் இவற்றை ஏன் கவனித்து, சிக்கல்களைத் தீர்க்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு வாடிக்கையாளர் நான் நான்கு ஐந்து முறை முயற்சி செய்தபோதிலும், தன்னால் ஆன்லைனில் பணம் அனுப்ப முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
மற்றவர்களும் SBI-க்கு பணம் அனுப்ப முடியவில்லை
மற்ற வங்கி வாடிக்கையாளர்களும் எஸ்பிஐ வங்கிக்கு பணம் அனுப்புவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர். மேலும் தொடர்ந்து பல வாடிக்கையாளர்கள் எஸ்பிஐயின் மொபைல் செயலியான, யோனோ செயலி சரியாக வேலை செய்யவில்லை என்று தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
எஸ்பிஐ தரப்பு என்ன சொல்கிறது?
இது குறித்து எஸ்பிஐ தரப்பில், எங்களால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். தொழில்நுட்ப கோளாறின் காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் எங்களது தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு அதனை சரி செய்து கொண்டுள்ளனர். அதுவரை எங்களது, மற்ற டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் விளக்கமளித்துள்ளது.