இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மார்ச் 2020 காலாண்டு முடிவுகள் இன்று வெளியாயின.
அதில் அனைவரும் பாராட்டும் விதத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் லாபம் 3,580 கோடி ரூபாயைத் தொட்டு எல்லோரையும் அசரடித்து இருக்கிறது. இதற்கு முந்தைய மார்ச் 2019 காலாண்டில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மொத்த லாபம் 838 கோடி ரூபாய் தானாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் செயல்பாட்டில் இருந்து வரும் வருமானம் (Total Income from Operations) மார்ச் 2020 காலாண்டில் 76,027 கோடி ரூபாயாக இருக்கிறதாம். இது கடந்த மார்ச் 2019 காலாண்டில் காட்டிய 75,670 கோடி ரூபாயை விட கொஞ்சம் அதிகம் தான் என்றாலும், லாபத்தில் பட்டையைக் கிளப்பி இருப்பதால் முதலீட்டாளர்கள் இதைக் கண்டு கொள்ளவில்லை.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் நிகர வட்டி வருமானம் (கடன் வழியாக வரும் வட்டி வருமானம் - டெபாசிட்களுக்கு கொடுக்கும் வட்டிச் செலவுகள்) 22,767 கோடி ரூபாயாக இருக்கிறதாம். இது கடந்த மார்ச் 2019 காலாண்டில் காட்டிய 22,954 கோடி ரூபாயை விட கொஞ்சம் குறைவு.
வங்கி என்றாலே செயல்படாத கடன்கள் (NPA) இல்லாமல் எப்படி. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தோராய வாராக் கடன் 6.15 சதவிகிதமாக சரிந்து இருக்கிறதாம். டிசம்பர் 2019 காலாண்டில் இது 6.94 %-மாக இருந்ததாம். மார்ச் 2019 காலாண்டில் தோராய வாராக் கடன் (Gross Non Performing Asset - Gross NPA) 7.53 சதவிகிதமாக இருந்ததாம்.
நிகர வாராக் கடன் (Net Non Performing Asset) 2.23 சதவிகிதமாக குறைந்து இருக்கிறதாம். இதற்கு முந்தைய காலாண்டில் இது 2.65 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, எஸ்பிஐ நல்ல காலாண்டு முடிவுகளைக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்கிற செய்தி பரவியதால், இன்று ஒரே நாளில் எஸ்பிஐ பங்குகள் சுமாராக 8.73 சதவிகிதம் விலை ஏற்றத்தைக் கண்டது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த பங்கு விலை ஏற்றம், வரும் வாரத்திலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.