எஸ்பிஐ வங்கி ஊழியர் ஒருவர் செய்த ஒரு சிறிய தவறால் 1.50 கோடி ரூபாய் தவறான வங்கி கணக்குகளுக்குச் சென்றுள்ளது. தெலுங்கானாவில் தலித் குடும்பங்களுக்கான நலத்திட்டமாகத் தலித் பந்து திட்டம் உள்ளது. இந்த திட்டத்திற்கான பணத்தை விநியோகிக்கும் போது எஸ்பிஐ வங்கி ஊழியர் சிறிய தவறு செய்துள்ளார்.
எஸ்பிஐ வங்கி
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக எஸ்பிஐ கிளையிலிருந்து ஏப்ரல் 24-ம் தேதி, ஊழியர் செய்த காப்பி பேஸ்ட் தவறால், 1.5 கோடி ரூபாய் லோட்டஸ் மருத்துவமனை ஊழியர்களின் 15 பேருக்கு தலா 10 லட்சம் ரூபாய் என சென்றுள்ளது.
மருத்துவமனை ஊழியர்கள்
தவறு நடந்ததை அறிந்த எஸ்பிஐ வங்கி கிளை, மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு அவர்களது ஊழியர்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தைத் திருப்பி வாங்கியுள்ளது.
15 ஊழியர்களில் 14 ஊழியர்கள் பணத்தை திருப்பி செலுத்திவிட்டனர். லேப் டெக்னீஷியன் மகேஷை மட்டும் தொடர்புகொள்ள முடியவில்லை.
பணத்தைத் திருப்பி அளிக்காத ஒருவர்
தனது கணக்கில் 10 லட்சம் ரூபாய் ஏதோ அரசு திட்டத்திலிருந்து தனக்கு வந்துள்ளது என்பதை அறிந்த மகேஷ், உடனே தனக்கு இருந்த 6.70 லட்சம் ரூபாய் கடனை அடைத்துவிட்டார்.
மறுப்பும் வழக்கும்
ஒருவழியாக மகேஷை தொடர்புகொண்ட பணத்தைத் திருப்பி கேட்ட போது அதை வழங்க அவர் மறுத்துவிட்டார். உடனே வங்கி தரப்பு காவல் துறையினரிடம் அளித்த புகாரின் பெயரில், அவர் மீது ஐபிசி பிரிவு 403-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழிக்கு வந்த நபர்
பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், 3.30 லட்சம் ரூபாயை மட்டும் மகேஷ் திருப்பி ஒப்படைத்துள்ளார். மீதம் உள்ள தொகையை 6.70 லட்சம் ரூபாயை வசூலிக்க வங்கி நிர்வாகம் முயன்று வருகிறது.
காப்பி-பேஸ்ட் பிழை
"வங்கி ஊழியரின் காப்பி-பேஸ்ட் பிழை இவ்வளவு பெரிய வம்புக்கு வழிவகுத்தது," என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கிகளில் இதுபோல ஏற்படும் தவறுகள் முதல் முறை அல்ல. பல முறை நடந்துள்ளது. பாஜக தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் கூறிய 15 லட்சம் ரூபாய்தான் தனது கணக்கில் வந்ததாகப் பலர் செலவு செய்துள்ளதும் செய்திகளாக வெளிவந்துள்ளன. வங்கிகள் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க என்ன வழி என்பதை ஆராய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.