இந்தியா முழுவதும் விலைவாசி உயர்வால் மக்கள் தவித்து வரும் இதேவேளையில் சில முக்கியமான செலவுகளும் வந்துள்ளது, இதனால் எப்போதும் இல்லாத வகையில் மக்கள் அதிகப்படியான தங்கத்தையும், தங்க நகைகளையும் அடகு வைத்து வருகின்றனர்.
அப்படித் தங்க நகைகளை அடகு வைத்த மக்கள் அதிகம் சென்ற இடம் எது தெரியுமா..? சொன்னா நிஜமாகவே நம்ப மாட்டீங்க..
விலைவாசி, கல்வி, குடும்பச் செலவுகள்
இந்தியாவில் தற்போது மக்கள் விலைவாசி உயர்வை தாண்டி, புதிய நிதியாண்டில் கல்வி கட்டணங்களுக்கான செலவு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. ஏற்கனவே பலர் வருமான இழப்பு, வேலைவாய்ப்பு இழப்புப் பிரச்சனையில் இருக்கும் காரணத்தால் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவும் தங்க நகைகளை அதிகளவில் அடகு வைக்கத் துவங்கியுள்ளனர்.
எஸ்பிஐ
இந்நிலையில் நாட்டின் முன்னணி வங்கியான எஸ்பிஐ வங்கியின் தங்க நகை கடன் போர்ட்போலியோ எப்போதும் இல்லாத அளவிற்கு ஜூன் காலாண்டில் 1 லட்சம் கோடி ரூபாய் அளவில் தாண்டியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் ஒட்டுமொத்த தங்க அடகு வர்த்தகத்தில் 25 சதவீதத்தைக் கைப்பற்றி யாரும் அசைக்க முடியாத நிலையில் உள்ளது.
தினேஷ் காரா
இதேவேளையில் இந்தியாவில் தங்க கடனுக்கான தேவையும், வர்த்தகமும் மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில் நடப்பு நிதியாண்டில் எஸ்பிஐ வங்கியின் தங்க கடன் வர்த்தகம் பெரிய அளவில் உயரும் எனத் தினேஷ் காரா தெரிவித்துள்ளார்.
தங்கம் தான் சொத்து
பணவீக்கம் அதிகமாக இருக்கும் நேரத்தில் தங்கம் தான் மிகவும் சிறப்பான சொத்து, இந்த நிலையில் கடந்த ஆண்டை காட்டிலும் ஜூன் காலாண்டில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாகவும் தினேஷ் காரா தெரிவித்துள்ளார்.
வெறும் 0.29 சதவீதம்
இதேபோல் தங்க கடனில் எஸ்பிஐ வங்கியின் வாராக் கடன் என்பது வெறும் 0.29 சதவீதம் மட்டுமே என்பதால் இப்பிரிவு வர்த்தகத்தில் மிகவும் வலிமையாக இருப்பதாகத் தினேஷ் காரா தெரிவித்துள்ளார். இதேபோல் இக்காலகட்டத்தில் பர்சனல் லோன் வாங்குவோரின் எண்ணிக்கையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
கொரோனா
கொரோனா காலத்திலும், தற்போது பிள்ளைகளைப் பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கும் போதும் சரி மக்களிடம் இருக்கும் அடிப்படை சொத்து என்றால் தங்கம் தான்.
இறக்குமதி
இந்த நிலையில் மத்திய அரசு தங்கம் இறக்குமதி மீதான அடிப்படை வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியது. இதனால் 10 கிராம் தங்கம் விலை 2000 ரூபாய் வரையில் உயரும் நிலை உள்ளது, இதனால் புதிதாகத் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைய வாய்ப்பு உள்ளது.