அதானி குழுமம் குறித்து ஹூண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்பு பெரும் சரிவை பதிவு செய்த வேளையில் கிரெடிட் சூசி, சிட்டி குரூப் ஆகியவை அதானி குரூப் நிறுவனங்கள் வெளியிட்ட பத்திரங்களை பிணையமாக வைத்து மார்ஜின் லோன் அளிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தான் இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவில் இயங்கி வரும் உள்நாட்டு வங்கிகளிடம் அதானி குழும நிறுவனங்களிடம் இருக்கும் கடன் வெளிப்பாடு குறித்த விவரங்களைக் கேட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான அடுத்தச் சில நிமிடத்தில் பங்குச்சந்தையில் அதானி நிறுவன பங்குகள் கூடுதலாகச் சரியை துவங்கியது.
மேலும் எஸ்பிஐ முதல் நாட்டின் பல வங்கிகள் அடுத்தடுத்து அதானி குழுமத்திற்கு அளித்துள்ள கடன் விபரங்கள் குறித்து வெளியிட்டு உள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதானி நிறுவனத்தில் உள்ள நிறுவனங்களுக்கு 2.6 பில்லியன் டாலர் அளவிலான கடனை வழங்கியுள்ளது. இதை வேறு விதமாகவும் சொல்ல முடியும் அதானி குழுமத்திற்கு எவ்வளவு கடன் வழங்க வேண்டும் என விதிகளின் கீழ் அனுமதிக்கப்படுகிறதோ அதில் பாதியை எஸ்பிஐ கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்பிஐ வெளிநாட்டு வங்கி கிளை
எஸ்பிஐ வங்கியின் வெளிநாட்டு வங்கி கிளைகள் வாயிலாக அதானி குழும நிறுவனங்களுக்குச் சுமார் 200 மில்லியன் டாலர்கள் அளவிலான கடனை கொடுத்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளையில் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் விரைவில் ஆர்பிஐ-க்கு அதானி குழுமத்திற்கான கடன் அளவு குறித்த தரவுகளைக் கொடுக்க உள்ளது.
தினேஷ் குமார் காரா
மேலும் SBI வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா, வியாழக்கிழமை அதானி குழும நிறுவனங்களுக் கடன்களை வழங்கி வருகிறோம். வங்கி நிர்வாகம் இதுவரை புதிய கடன்களை அளிப்பதில் எவ்விதமான சவாலான சூழ்நிலைகளைக் காணவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
இதேபோல் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதானி குழு நிறுவனங்களுக்குச் சுமார் 7000 கோடி ரூபாய் அளவிலான தொகையை கடனாகக் கொடுத்துள்ளது எனக் கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் தலைவர் அதுல் கோயல் தெரிவித்துள்ளார். இதில் பெரும் பகுதி தொகை அதானி ஏர்போர்ட் வர்த்தகத்திற்கு மட்டும் அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐடிஎப்சி வங்கி
மேலும் ஐடிஎப்சி வங்கி அதானி குழுமத்தின் பேமெண்ட்கள் குறித்த நாளுக்குள் வருவதாகவும், தனது மொத்த non-funded நிலுவையில் 0.51 சதவீதம் மட்டுமே அதானி குழும நிறுவனங்களைச் சார்ந்து உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இண்டஸ்இந்த் வங்கி
இதேபோல் இண்டஸ்இந்த் வங்கியின் 29 டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான கடன் புத்தகத்தில் 0.51 சதவீதம் மட்டுமே அதானி குழும நிறுவனங்களைச் சார்ந்து உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி
இன்று ரிசர்வ் வங்கி, இந்தியாவில் இயங்கி வரும் உள்நாட்டு வங்கிகளிடம் அதானி குழும நிறுவனங்களிடம் இருக்கும் கடன் வெளிப்பாடு குறித்த விவரங்களைக் கேட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இந்திய வங்கிகள் அதிகாரிகள் தங்கள் வங்கியின் அதானி குழும கடன் அளவு குறித்த தரவுகளை வெளியிட்டு வருகின்றனர். இது வங்கி நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
இந்திய வங்கிகள்
இதன் மூலம் ரிசர்வ் வங்கி இந்தியாவில் எந்தெந்த வங்கிகள் எவ்வளவு கடனை அதானி குழுமத்திற்கு அளித்துள்ளது என்பது குறித்த தகவல்களைச் சேகரிக்க உள்ளது. இந்த நடவடிக்கை ஹிண்டன்பர்க் அறிக்கை, செபி அறிவிப்பு, கிரெடிட் சூசி முடிவு ஆகியவற்றுக்குப் பின்பு எடுக்கப்பட்டு உள்ளதால் அதானி குழுமப் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளது.