இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தன்னுடைய கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறது.
எம் சி எல் ஆர் (MCLR - Marginal Cost of fund based Lending Rate) வட்டி விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு தான், வீட்டுக் கடன், வாகன கடன்கள் எல்லாம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த எம் சி எல் ஆர் வட்டி விகிதங்களைத் தான் 0.05 சதவிகிதம் குறைத்து இருக்கிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. என்னங்க வெறும் 0.05 சதவிகிதம் தானா என அசால்டாகக் கேட்காதீர்கள். இந்த 0.05 சதவிகிதத்துக்கு வட்டி கணக்கிட்டுப் பார்த்தீர்கள் என்றால் ஒரு இ எம் ஐ-க்கு 100 ரூபாயாவது குறையும்.
ஏற்கனவே ஹெச் டி எஃப் சி வங்கி தன்னுடைய எம் சி எல் ஆர் வட்டி விகிதத்தை 0.10 சதவிகிதம் குறைத்து இருப்பதும் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த எம் சி எல் ஆர் வட்டி விகிதங்களைக் குறைத்ததால் ஒரு பக்கம் நாம் வாங்கும் வீட்டுக் கடன் மற்றும் கார் கடன்களின் வட்டி விகிதங்கள் குறைந்து இருக்கிறது. இதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் எம் சி எல் ஆர் வட்டி விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு வட்டி கணக்கிடப்படும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கும் வட்டி நிர்ணயிக்கப்படும் திட்டங்களும் நிறைய இருக்கின்றன. எனவே அந்த ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு கொடுக்கும் வட்டி விகிதங்களும் கொஞ்சம் குறைந்து இருக்கிறதாம்.
எஸ் பி ஐ வங்கி தன்னிடம் பல்க் டெபாசிட் போட்டு வைத்திருக்கும் டெபாசிட்தாரர்களுக்கு கொடுக்கும் வட்டியில் சுமாராக 30 முதல் 75 அடிப்படைப் புள்ளிகள் (0.3 - 0.75 சதவிகிதம்) வட்டி விகிதங்களை குறைத்து இருக்கிறார்களாம். இப்படி வட்டி குறைத்ததற்கு, இந்தியப் பொருளாதாரத்தில் போதுமான பணம் புழங்க வேண்டும், அதிக வட்டி கொடுத்துவிட்டால், பணம் வங்கியிடமே தங்கிவிடும் என விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள்.
2019-ம் ஆண்டில், இதுவரை ஆர் பி ஐ வங்கி 1.35 சதவிகிதம் வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்கள். பல வங்கிகள் ஆர் பி ஐ வங்கியின் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை அடிப்படையாக வைத்து கடன் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். மற்ற வங்கிகள் இந்த எம் சி எல் ஆர் வட்டி விகிதத்தை குறைக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.