இந்தியாவில் வங்கி வேலை என்றாலே லைஃப் செட்டிலாகிவிட்டது என்று தான் கூறுவார்கள். ஏனெனில் வங்கி வேலையில் அடுத்தடுத்த சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும் குறிப்பாக பணி பாதுகாப்பு இருக்கும். இதனால் ஏராளமான இந்திய பெற்றோர் பிள்ளைகளை வங்கி போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் படி ஊக்கம் தருகிறார்கள்.
வங்கிகளில் வேலை அதுவும் பொதுத்துறை வங்கிகளில் வேலை என்றால் சொல்லவே வேண்டாம் நிச்சயம் லட்சக்கணக்கில் தான் சம்பளம் இருக்கும் என்பது தான் பெரும்பாலான மக்களின் கருத்து. ஆனால் உண்மை அப்படி இல்லை என கூறும் வகையில் இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் ஒருவரின் சம்பள விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பியுள்ளது.

பூஜா என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் எஸ்பிஐ வங்கியில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 'புரோபேஷனரி ஆபீசராக' பணியில் சேர்ந்து, தற்போது 'ஸ்கேல் 3' மேலாளராக பதவி உயர்வு பெற்றுள்ள ஒருவரின் வருமான வரி படிவம் (Form 16) ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ஓராண்டு கால மொத்த ஊதியம் 35.24 லட்சம் ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பார்த்த பலரும் வங்கி வேலை லட்சக்கணக்கில் சம்பளம் என கூறுவார்கள், ஆனால் கையில் கிடைக்கும் சம்பளமே வேறு என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மொத்த வருமானம் என்பது மாதந்தோறும் வங்கி ஊழியரின் கைக்கு வரும் தொகையல்ல என கூறியுள்ளார். இந்த ரூ.35 லட்சம் என்ற தொகையில், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் 'லீவ் ஃபேர் கன்செஷன்' (LFC) மற்றும் விடுப்புக்கான ஊதியம் (Leave Encashment) போன்ற ஒருமுறை வழங்கப்படும் பலன்கள் அடங்கியுள்ளன. இவை மாத சம்பளத்தின் ஒரு பகுதியல்ல என கூறியுள்ளார்.
அடுத்ததாக வருமான வரி , தேசிய ஓய்வூதியத் திட்டம் , வருங்கால வைப்பு நிதி மற்றும் வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவற்றுக்கான மாதத் தவணைகள் ஆகியவை பிடித்தம் செய்யப்பட்ட பிறகு, ஊழியரின் வங்கிக் கணக்கிற்கு வரும் 'டேக் ஹோம்' சம்பளம் தொகை, இந்தக் காகிதத்தில் இருக்கும் தொகையை விட மிகக் குறைவு என சுட்டிக்காட்டுகிறார்.
நெட்டிசன்கள் பலரும் இது தான் உண்மை என தெரிவித்துள்ளனர்.ஆண்டுக்கு 35 லட்சம் என்பது பார்க்கப் பெரிய தொகையாகத் தெரிந்தாலும், வரிகள் மற்றும் பிற பிடித்தங்கள் போக, ஒரு வங்கி அதிகாரியின் உண்மையான மாத வருமானம் நாம் நினைப்பதை விட குறைவாகவே இருக்கும். மொத்த வருமானத்தையும், கைக்கு வரும் சம்பளத்தையும் குழப்பிக்கொள்ளக் கூடாது என ஒரு நபர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் எத்தனை பிடித்தங்கள் இருந்தாலும், 35 லட்சம் என்பது நல்ல தொகுப்பு ஊதியம் தான் இந்த பணமெல்லாம் உங்களுக்கு தானே கிடைக்க போகிறது என ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications

